பயணிகளின் துன்புறுத்தலில் இருந்து பொதுப் போக்குவரத்து ஊழியர்களைப் பாதுகாக்கும் நோக்கில், பேருந்து ஓட்டுநரின் இருக்கையைச் சுற்றி காப்பு அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
ஆயினும், அத்தகைய துன்புறுத்தலில் ஈடுபடாதவாறு பயணிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று திரு சீ வலியுறுத்தி இருக்கிறார்.
“பொதுமக்கள் நமது பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு மதிப்பளித்து, பாதுகாப்பான சூழலில் அவர்கள் தங்களின் கடமையை ஆற்ற அனுமதிக்க வேண்டியது அவசியம்.
“அப்படி நடந்துகொள்ளாத பட்சத்தில் நமது போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பு, கண்ணியத்தைக் காக்க எத்தகைய தடுப்பரண்களை அமைத்தாலும் உதவாது,” என்று திரு சீ குறிப்பிட்டார்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர் ஒருவரைத் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ஆடவர் இருவருக்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக அந்நிறுவனம் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் திரு சீ கலந்து கொண்டு பேசினார்.
இம்மாதம் 15ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில் பாசிர் ரிஸ் டிரைவ் 6ல் இருந்து ‘21’ எண் கொண்ட எஸ்பிஎஸ் பேருந்து ஒன்றில் 52 வயதான ஆடவர் ஒருவர் ஏறினார்.
அவர் முகக்கவசம் அணியாததைக் கண்ட பேருந்து ஓட்டுநர், அதை அணியும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் முகக்கவசம் அணிந்த அந்த ஆடவர், ஓட்டுநரை இழிவாகப் பேசினார்.
இதையடுத்து, போலிசுக்குத் தகவல் தெரிவித்த ஓட்டுநர், அவர்கள் வருவதற்காக பாசிர் ரிஸ் டிரைவ் 1 புளோக் 210க்கு முன்பாகப் பேருந்தை நிறுத்தினார். இதையடுத்து, ஓட்டுநரை அந்தப் பயணி தாக்கத் தொடங்கினார்.
அப்போது, ஆடவர் மூவர் குறுக்கிட்டு அந்தப் பயணியைத் தடுத்து நிறுத்தி, அவரைப் பேருந்தில் இருந்து இறக்கி, போலிஸ் வரும் வரை மடக்கிப் பிடித்திருந்தனர்.
நிதி ஆலோசகர் கிளமென்ட் டான் ஸி ஹாவ், 29, பல்கலைக்கழக மாணவர் முகம்மது முத்தாசிம் காசிம், 25, ஆகியோர் உதவிக்கு வந்த மூவரில் இருவர். மூன்றாமவர் யாரென அடையாளம் காண முடியவில்லை.
தெம்பனிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் அவ்விருவருக்கும் சான்றிதழும் உணவுக்கூடையும் வழங்கப்பட்டன.
தாக்குதலில் காயமுற்ற பேருந்து ஓட்டுநர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. தாக்குதலில் இறங்கிய ஜாஃபாலி அப்துல் ரஹிம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த காணொளி எஸ்பிஎஸ் டிரான்சிட் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இவ்வாண்டில் இதுவரை பொதுப் பேருந்து ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட 40 பேர் தாக்கப்பட்டதாகவும் அவற்றில் பாதி முகக்கவசம் தொடர்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் இத்தகைய 33 சம்பவங்கள் பதிவாகின என்றும் தெரிவிக்கப்பட்டது.