ஒரே முதலாளியிடம் வேலை பார்த்த பங்ளாதேஷை சேர்ந்த சகோதரர்கள் இருவர், இரு வேறு சம்பவங்களில், வேலை நேரத்தில் உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் நிரந்தர உடற்குறை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதனையடுத்து, இழப்பீடு கோரி தங்கள் முதலாளி மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
ஜாஹித், 40, ஜேனெட், 44 ஆகிய இருவரும் வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு பணிபுரிந்தவர்கள். 2018ஆம் ஆண்டில் விபத்துகளுக்குப் பிறகு அவர்கள் தாயகம் திரும்பினர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஏணி ஒன்றில் 4 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த ஜாஹித் தற்போது சக்கர நாற்காலியின் உதவியால் நகர முடிகிறது. யுனைட்டெட் ஸ்குவேர் மாலில் இருக்கும் ஸ்டார்பக்ஸ் கடையின் குளிரூட்டி பராமரிப்புப் பணியின் போது அவர் விபத்துக்குள்ளானார்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வெஸ்ட்கேட் டவரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது 3 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த திரு ஜேனெட் கடுமையான முதுகுத்தண்டு காயங்களால் படுத்தபடுக்கையாக இருக்கிறார்.
திரு ஜேனெட் சிகிச்சை பெற்ற மருத்துவமனையை நிர்வகிக்கும் தேசிய பல்கலைக்கழக சுகாதாரச் சேவைகள் குழுமத்துக்கு, அவரது சிகிச்சை செலவை வழங்க அவர் பணிபுரிந்த நியூடெக் இஞ்சினியரிங் நிறுவனம் தவறிவிட்டது. சுமார் $296,000 கட்டணத்தை திரு ஜேனெட்டிடம் கேட்கப்போவதில்லை என தேசிய பல்கலைக்கழக சுகாதாரச் சேவைகள் குழுமம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.
சகோதரர்கள் இருவரும் விபத்தின்போது பணிபுரிந்த எஸ்டிஏ ரிட்டா இஞ்சினியரிங் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். ஹோ லா சட்ட நிறுவனத்தின் என். ஸ்ரீநிவாசன் அவர்களுக்காக வாதிடுகிறார்.
எஸ்டிஏ ரிட்டா இஞ்சினியரிங் நிறுவனத்தின் உரிமையாளர் திரு ஃபெல்லிஸார்டோ பரஸ் ஜோஸ், அவர் முன்பு பணியாற்றிய நியூடெக் இஞ்சினியரிங் நிறுவனத்தின் முதலாளி ஆகிய இருவரிடமும் $650,000 இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளார் திரு ஜேனெட்.
மேலும் வெஸ்கேட் டவர்சின் பராமரிப்புக்குப் பொறுப்பு வகிக்கும் நிர்வாகம், முதல் நிலை ஒப்பந்ததாரரான ஸோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் பெயர்களும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஸோ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உப ஒப்பந்ததாரர் எஸ்டிஏ ரிட்டா இஞ்சினியரிங் நிறுவனம்.
அதேபோல திரு ஜாஹித் $290,000 இழப்பீடு கோரி திரு ஜோஸ், ஸோ இன்டர்நேஷனல் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டிய இடங்களில் தங்களது பாதுகாப்பு சரிவர உறுதிப்படுத்தப்படவில்லை என இருவரும் தங்களது வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இருவரும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் என்றும் அவர்களது கவனக்குறைவால்தான் கீழே விழுந்தனர் என்றும் தற்காப்பு தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
இரு வழக்குகளும் நடைபெற்று வருகின்றன.