வசதிகுறைந்த நிலை, குடும்ப வன்முறை, கற்றல் சவால்கள் போன்ற பலவித பிரச்சினைகளை எதிர்நோக்கும் சிறார்களுக்குக் குறைந்த விலையில் தரமான கல்வியை வழங்கி வருகிறது ‘சைல்ட் அட் ஸ்தீரிட் 11’ அறநிறுவன அமைப்பு.
இந்த அமைப்பின் முயற்சிகளுக்குக் கைகொடுக்க மெய்நிகர் நிதி திரட்டு முயற்சி ஒன்று இம்மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது.
“பெற்றோர்களின் வேலை இழப்பாலும் வருமானக் குறைவாலும் அவர்களின் குழந்தைகள் உணர்வுப்பூர்வமாக மற்றும் கல்வி பிரச்சினைகளால் அவதியுறுவதைப் பார்ப்பதற்கு வருத்தத்தை அளிக்கிறது. தற்போது சமுதாயத்தில் ஆக அதிக பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் உள்ளோர், குழந்தைகள். இவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்காவிட்டால் எதிர்காலத் தலைமுறையினர் பாதிக்கப்படுவர்,” என்றார் நிலையத்தின் தலைமை நிர்வாகியும் நிறுவனர்களில் ஒருவருமான திருவாட்டி எம். நிர்மலா.
நிலையத்தின் வழி தற்போது 60 சிறார்கள் பயன் அடைகின்றனர். கொவிட்-19 கொள்ளை நோயால் இவ்வாண்டின் நிதி திரட்டு முயற்சியில் பலதரப்பட்ட சவால்கள் ஏற்பட்டன என்றும் முதல் முறையாக மெய்நிகர் நிதி திரட்டு முயற்சி நடந்தது என்றும் சொன்னார் அவர்.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல் அங்கங்களுடன் நிதி திரட்ட நேரடி ஏலவிற்பனை அங்கமும் இடம்பெற்றது. புத்தகங்கள், ஓவியங்கள், உள்ளூர் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்புகள் போன்றவை ஏலத்தில் விற்கப்பட்டன. அங் மோ கியோ, பிளோக் 102ல் இந்த நிலையம் 1999ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொங்கியது. அந்த காலகட்டத்தில் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு இந்தர்ஜித் சிங், நிலையத்தை உருவாக்க இடம் ஒன்றைப் பார்த்ததுடன் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதிலும் முக்கிய பங்காற்றினார்.
ஓய்வுபெற்ற அரசியல்வாதியான திரு சிங், மெய்நிகர் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்.
“நிலையத்தின் ஆரம்பக்கால சிறார்கள் பலர் இன்று பெரியவர்கள் ஆகியிருப்பர். வேலை செய்துகொண்டோ படித்துக்கொண்டோ இருப்பர். ‘சைல்ட் அட் ஸ்தீரிட் 11’ நிலையத்தின் உன்னதச் சேவையை நான் பார்த்திருக்கிறேன். இது ஒரு பயனுள்ள திட்டம் என்று நினைக்கிறேன், மனநிறைவு தரும் ஒன்றும்கூட,” என்றார் திரு சிங்.
நிலையத்திற்கான செலவுகள் ஒரு மாதம் $70,000 முதல் $80,000 வரை எட்டுகிறது. திரட்டப்படும் நிதி ஆரோக்கியமான உணவுவகைகள், தரமான கல்வி, சுத்தமான ஆடைகள் போன்றவற்றுக்குச் செலவிடப்படும் என்று நம்பிக்கையளித்தார் நிர்மலா.
பொதுமக்கள் இந்த நிலையத்திற்கு எந்நேரத்திலும் நன்கொடை வழங்கலாம். இணையம்வழி நன்கொடை செலுத்தும் வசதியும் உண்டு. 100 வெள்ளிக்கும் அதிகமாக நன்கொடை அளிப்பவர்கள் வரி கழிவிற்குத் தகுதி பெறுவார்கள்.
நன்கொடை வழங்க https://www.giving.sg/child-at-street-11-ltd/help_children_keep_on_lear… இணைப்பை நாடலாம்.