சிங்கப்பூரில் நிகழ்நேர தரவுகள் பயன்படுத்தப்படுவதால், வழக்கமாகத் தேவைப்படும் கால அளவிலிருந்து பாதி அளவு நேரத்திலேயே புதிய கொவிட்-19 தடுப்பு மருந்துக்கு பயன்பாட்டு அனுமதி கிடைக்கும் நிலை ஏற்படக்கூடும்.
கொவிட்-19 சூழலைக் கையாளத் தேவையான முக்கியமான சுகாதாரப் பொருள்கள் சிங்கப்பூருக்கு தொடர்ந்து கிடைப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக தடுப்பு மருந்து பரிசோதனையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்த பிறகு தரப்படும் தரவுகளை நிறுவனங்கள் பகுப்பாய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கப்படும்.
ஆனால், தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் மருந்தக மற்றும் தயாரிப்புத் தரவுகளை, சிங்கப்பூரில் மருந்தக நிறுவனங்கள் பரிசோதனைகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் சமயத்திலேயே அவ்வப்போது சமர்ப்பிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்தது.
அத்தகைய ‘ரோலிங் சப்மிஷன்’ முறையில் தரவுகள் பெறப்படுவதால், நெறியாளர்கள் நிகழ்நேர மறு ஆய்வை பரிசோதனை நடைபெறும் அதே காலகட்டத்தில் செய்ய முடியும். ஒவ்வொரு கட்டமும் முடியும் வரை தரவுகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.
இதன் மூலம், பாதுகாப்பு உறுதி செய்யப்படும் அதே வேளையில் தடுப்பு மருந்துக்கான அனுமதி நடைமுறைகளும் விரைவுபடுத்தப்படும் என்ற ஆணையம், குறிப்பிடத்தக்க மோசமான பக்கவிளைவுகள் இல்லாத நிலையில், தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கான அனுமதி கிடைப்பதற்கான கால அளவு குறையும் என்றது.
‘ரோலிங் சப்மிஷன்’ முறையை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆஸ்ட்ராஸெனகா, ஆகஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் AZD1222 கொவிட்-19 தடுப்பு மருந்துக்கும் பயன்படுத்த திட்டமிடப்படுவதாக இம்மாதம் முதல் தேதியில் ஐரோப்பிய மருத்துவ முகவை தெரிவித்தது.
சிங்கப்பூரில் டியூக்-என்யூஎஸ், ஆர்க்டரஸ் தெராப்டிக்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவை இணைந்து உருவாக்கும் Lunar-CoV19 என்ற ஒரே தடுப்பு மருந்துதான் பரிசோதனையில் உள்ளது.