சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, நெருக்கமான தற்காப்பு உறவை மறுவுறுதிப்படுத்தியுள்ளன.
சிங்கப்பூருக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் நேற்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னைச் சந்தித்துப் பேசினார்.
தற்காப்பு தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது வட்டார, அனைத்துலக தற்காப்பு மேம்பாடுகள், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஷோல்வாட்டர் பேயில் உள்ள பயிற்சி தளத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டு 30 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வேளையில், அமைச்சர் ரெனால்ட்சின் வருகை முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று அமைச்சு கூறியது.
இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்கையும் அமைச்சர் ரெனால்ட்ஸ் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் லீ பின்னர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் இவ்வட்டார அனைத்துலகப் பாதுகாப்பு சவால்களை எப்படி சேர்ந்து எதிர்கொள்வது என்பது பற்றி அவரிடம் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் ரெனால்ட்ஸ், ஒரு நாள் அறிமுகப் பயணம் மேற்கொண்டு நேற்று சிங்கப்பூர் வந்தார்.