இளைஞரை கத்தியால் தாக்கியதாக ஒப்புக்கொண்டார்

இளைஞரை கத்தியால் தாக்கியதாக ஒப்புக்கொண்டார்

1 mins read
eba545bc-ba5b-47aa-abc2-9ec0b339c197
-

சைனா டவுனில் மே மாதம் 10ஆம் தேதி நடந்த கைகலப்பில் குண்டர்கும்பல் உறுப்பினர் ஒருவர் கத்தியால் இளைஞர் ஒருவரைத் தாக்கினார். அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்திலும் வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

புளோக் 101, அப்பர் கிராஸ் ஸ்திரீட், பீப்பிள்ஸ் பார்க் சென்டர் முகவரி கட்டடத்தில் 16வது மாடியில் பொது நடைபாதையில் இரு குழுவினர் மோதிக்கொண்டனர். முகம்மது ஷரைல் ஹைக்கல் அப்துல்லா, 19, என்பவர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைத் தாக்கியவர்களில் ஒருவரான நூர் நஜாத் ஆல்வி என்பவர் இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கொவிட்-19 நிபந்தனைகளை மீறியதாகவும் அவர் இன்று ஒப்புக்கொண்டார். ஏப்ரல் 7 முதல் ஜூன் 1 வரை கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது மக்கள் சரியான காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நூர் ஒரு சிங்கப்பூரர். அவருக்கு இன்று 21 வயதாகிறது.

சீர்திருத்த பயிற்சி மற்றும் நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் நூர் நஜாத்தை வைக்க அவர் பொருத்தமானவர்தானா என்பதை மதிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு நவம்பர் 12ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

ஆயுதத்துடன் கலகத்தில் ஈடுபடுவதாகக் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரிலும் குற்றவாளிக்கு 10 ஆண்டு வரை சிறையும் பிரம்படியும் விதிக்க முடியும்.