வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 420 சைவ உணவு வகைகளின் சின்னஞ்சிறிய வண்ணக் களிமண் மாதிரிகளை உருவாக்கி வீட்டில்உள்ள தமது நவராத்திரி கொலு கண்காட்சியில் வைத்திருக்கிறார் திருவாட்டி மீனாட்சி ராம், 52.
கொரோனா கிருமித்தொற்றுச் சூழலில் அதிகரித்த தமது மனக்கவலையை எதிர்கொள்ள இந்த முயற்சி பெரிதும் உதவியதாக நரம்பு மற்றும் இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவாட்டி மீனாட்சி கூறினார்.
தோசை, பொங்கல், ‘போண்டா’, ‘வடா பாவ்’ ஆகியவற்றுடன் சீனர்களின் மூன்கேக், டம்ப்ளிங், ஹோர்ஃபான், மலாய்க்காரர்களின் குவே லாப்பிஸ், லத்தின் அமெரிக்கர்களின் நாச்சோஸ், சூரோஸ், புரிட்டோஸ் எனப் பல்வேறு பதார்த்தங்களின் மாதிரி வடிவங்களை இவர் மிகத் துல்லியமாக உருவாக்கி, தெய்வ உருவங்களுடன் கூடிய பல படிகளைக் கொண்ட கொலுவுக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் புதிய கருப்பொருளுடன் இத்தகைய படைப்புகளை உருவாக்கி வரும் திருமதி மீனாட்சி, இந்தச் சின்னஞ்சிறிய, மிக நுணுக்கமான கைவினைப் பொருட்களை வடிவமைக்க எவ்விதப் பயிற்சியையும் பெறவில்லை என்றும் சுயமாக அனைத்தையும் செய்வதாகவும் கூறினார்.
‘ஃபைப்ரோமியல்ஜியா’, ‘ஆட்டோ இம்மூன் டிஸ்ஆர்டர்’ ஆகிய நரம்பு சம்பந்தமான நோய்களைக் கொண்ட திருவாட்டி மீனாட்சியின் இதயத்திற்குள் ‘டிபிப்ரில்லேட்டர்’ கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
“பொதுவாகவே என் மனைவிக்கு மருத்துவக் கண்காணிப்பு அதிகம் தேவைப்படுகிறது. கொவிட்-19 பரவல் தொடங்கியபோது ஏதேனும் அவசரம் ஏற்பட்டால் மட்டும் வரும்படி மருத்துவர்கள் எங்களிடம் கூறிவிட்டனர். இது எங்களை மேலும் கவலையில் ஆழ்த்தியது,” என்று திருமதி மீனாட்சியின் கணவர் திரு ராம் வி. ஐயர், 57, தெரிவித்தார்.
ஆயினும், மனதை அலைய விடாமல் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு கைவினைப் பொருளையும் கச்சிதமாக உருவாக்கிய திருவாட்டி மீனாட்சி, முடிவில் மனதிருப்தியையும் நிம்மதியையும் உணர்வதாகத் தெரிவித்தார்.
“இந்த ஒன்பது நாள் பண்டிகை, தீமையை நன்மை வெல்வது பற்றியது. இந்தக் கலைப்பணியில் ஈடுபட்டதன் மூலம் எனக்குள் இருந்த எதிர்மறை உணர்வுகளை முறியடித்துவிட்டேன்,” என்று திருமதி மீனாட்சி கூறினார்.
கைவினைப் பொருட்கள் மட்டுமின்றி ஆடை, ஆபரண அலங்காரம் செய்வது, தஞ்சாவூர் ஓவியங்களைத் தீட்டுவது, சீன ஓவியங்களை வரைவது போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்ற தமது தாயாரை நினைத்து வியப்படைவதாகக் கூறினார் திருவாட்டி மீனாட்சியின் மகள் நிரஞ்சனா ராம், 23.