சிங்கப்பூரில் மேலும் எழுவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,980ஆக உள்ளது.
சமூக அளவில் ஒருவருக்குத் தொற்று உறுதியானதாகவும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டவில்லை என்றும் சுகாதார அமைச்சு நேற்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட எஞ்சிய அறுவர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறக்கப்பட்டது.
இதற்கிடையே, கிருமி தொற்றியவர்கள் சென்றிருந்த இடங்களின் பட்டியலில் ஐயான் ஆர்ச்சர்ட், 313@சாமர்செட், தெம்பனிஸ் மால், லாட் ஒன் ஷாப்பர்ஸ் மால், பாய லேபர் குவாட்டர் மால், காலாங் வேவ் மால், ஃபூ லு ஷொவ் காம்பிளெக்ஸ், அவர் தெம்பனிஸ் ஹப் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிங்கப்பூரில் நேற்று புதிதாக மூவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் இருவர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.
சமூக அளவில் அன்று எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவருக்குத் தொற்று உறுதியானது.