கொரோனா கிருமித்தொற்று சூழலிலும் வர்த்தகங்கள் இணைவதற்குப் பாதுகாப்பான, பத்திரமான ஒரு சந்திப்பு இடமாக சிங்கப்பூர் உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
வட்டார நாடுகளின் மத்தியில் முக்கியமான பயண, இடைமாற்றப் பயண மையமாகத் திகழ்வதால் சிங்கப்பூர் இத்தகைய பாதுகாப்பை வழங்கும் சாத்தியம் உண்டு என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
“வருகையாளர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் விரைவான, மேம்படுத்தப்பட்ட முறையில் உறுதிசெய்பவருக்கே இப்போட்டியில் சாதகநிலை. இதை சிங்கப்பூர் அறிந்துள்ளது. வட்டாரத்தில் முன்னணியில் இருப்போரில் சிங்கப்பூரும் இடம்பெற எண்ணம் உண்டு,” என்றார் திரு சான்.
“இத்தகைய ஆற்றல்களை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு அவற்றைச் செயல்படுத்தினால் போட்டியாக இருக்கும் மற்றவர்களிடமிருந்து நாம் தனிச்சிறப்புடன் விளங்குவோம்,” என்றார்.
பயணம் தொடர்பில் சேண்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு நிலையத்தில் இரண்டு நாள் நடைபெற்று வரும் ‘டிராவல்ரிவைவ்’ நிகழ்வில் திரு சான் இவ்வாறு பேசியிருந்தார். ‘மைஸ்’ எனப்படும் கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யத் தகுந்த ஒரு முன்னணி இடமாக சிங்கப்பூர் மாற விரும்புவது குறித்தும் அவர் பேசினார்.
நாடுகளுக்கு இடையே இருக்கும் கொரோனா கிருமி தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளால் வர்த்தகச் சந்திப்புக் கூட்டங்கள் நடத்த முடியாமல் போகலாம். அந்நேரத்தில் சிங்கப்பூர் ஏற்ற ஒரு சந்திப்பு இடமாகத் தன்னை அமைத்துக்கொள்ளும் திட்டத்தை அமைச்சர் சுட்டினார்.
சிங்கப்பூர் பயணக் கழகம், ‘மெஸ்ஸெ பெர்லின் (சிங்கப்பூர்)’ ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘டிராவல்ரிவைவ்’, புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் முதல் வர்த்தக நிகழ்வாகும். தானியக்க முன்பதிவுச் சாவடிகள் போன்றவை நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்டன.
கொரோனா கிருமி பரவல் தொடங்கியது முதல் ஆசிய பசிபிக் வட்டாரத்திலேயே நடைபெறும் முதல் நேரடி அனைத்துலக வர்த்தக நிகழ்வும் இதுவே என்று கழகம் குறிப்பிட்டது.
கொரோனா கிருமித்தொற்று தொடங்கியது முதல் சிங்கப்பூரில் முன்னோடித் திட்டமாக நடைபெறும் முதல் ‘மைஸ்’ நிகழ்வும் இது என்று கூறப்பட்டது.
இதில் சுமார் 1,000 பங்கேற்பாளர்கள் நேரடியாக வந்து கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில பங்கேற்பாளர்கள் நேரலையாகவும் இதில் கலந்துகொள்கின்றனர். பங்கேற்பாளர்களில் 15 நாடுகளைச் சேர்ந்த 65 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அடங்குவர். தற்போது மற்ற ‘மைஸ்’ நிகழ்வுகளில் 250 பேருக்கு மேல் கலந்துகொள்ள முடியாது.
‘மைஸ்’ திட்டத்தைப் பொறுத்தவரை, முன்னதாக எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலைக்குச் செல்ல முயற்சி செய்கிறோம் என்று கூறி சிங்கப்பூர் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போவதில்லை என்றார் திரு சான். அதையும் தாண்டி, புதிதாக ஒன்றைச் சாதிக்கவும் தன்னால் முடிந்த அளவில் புதுவகையான அனுபவங்களை வழங்கவும் சிங்கப்பூர் முனைந்துள்ளதாக அவர் கூறினார். சுகாதார, பாதுகாப்பு காரணங்களால் கொள்ளைநோயின் ஆரம்ப காலத்திலேயே சிங்கப்பூர் அதன் எல்லைகளை மூடியதுடன் பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்தது. ஆனால் படிப்படியாக பயணங்களைத் தொடங்கவும் உலகத்துடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் இப்போது நம்பிக்கை பிறந்துள்ளதாக அவர் சொன்னார்.
‘மைஸ்’ பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நேரடியாகவும் நேரலையாகவும் நடைபெறும் ‘டிராவல்ரிவைவ்’ நிகழ்வு, 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மேன்மேலும் கூடுதல் அனைத்துலக வர்த்தக நிகழ்வுகள் இங்கு நடைபெற வழிவகுக்கும் என்ற நோக்கத்துடன் நடைபெறுகிறது.
பயணக் கழகம் நேற்று கண்காட்சி ஏற்பாட்டாளர்களான ‘ஃபியேரா மிலானோ’, ‘மெஸ்ஸெ மியூநிக்’, ‘இன்ஃபோர்மா டெக்’ ஆகியோருடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது.