ஜாமியா சிங்கப்பூர் அமைப்பும் இந்திய முஸ்லிம் பேரவையும் இணைந்து ‘இணக்கம்’ நூல் வெளியீடு நிகழ்ச்சியை இம்மாதம் 20ஆம் தேதி மெய்நிகர் பாணியில் நடத்தின. சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
“நல்லிணக்கம் என்பது சமயங்களையும் நாட்டு எல்லைகளையும் கடந்தது என்பதையே இந்த இணக்கம் நூல் தொகுப்பு சுட்டிக் காட்டுகிறது. அச்சுப் பிரதி, மின்நூல், ஒலிநூல் ஆகிய மூன்று வடிவங்களில் பிரசுரிக்கப்படும் இந்த நூலை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் படித்து பயன்பெறும் வாய்ப்பைப் பெறுவர்,” என்று திரு சண்முகம் சொன்னார்.
ஜாமியா அமைப்பும் இந்திய முஸ்லிம் பேரவையும் கடந்த பல ஆண்டுகளாக சமூகத்திற்குச் சிறந்த சேவையாற்றி வந்துள்ளனர் என்றும் இவ்விரண்டு அமைப்புகளும் இனம், சமய வேறுபாடின்றி சமுதாயத்தில் பல்வேறு நலப் பணிகளை ஆற்றி வருகின்றன என்றும் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார். சிங்கப்பூரைச் சேர்ந்த ஐந்து கவிஞர்களும் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு கவிஞர்களும் எழுதிய தமிழ் கவிதைப் படைப்புகள் இந்த நூலில் இடம்பெறுகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமியா ஏற்பாடு செய்திருந்த ‘வள்ளல் நபி வழியில் வாழ்வியல் பெருவிழா’ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையுடன் இணைந்து நடத்திய கவியரங்கம் ஒன்றில் இந்த ஏழு கவிஞர்களும் படைத்து இருந்த கவிதைகளைக் கொண்டு, 98 பக்கங்கள் உள்ள ‘இணக்கம்’ நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை ஒட்டி இந்த நூல் தொகுக்கப்பட்டு உள்ளது. இந்த நூல் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் எச்.எம்.சலீம் தெரிவித்தார்.
பள்ளிகள், நூலகங்களுக்கு ஏறத்தாழ 500 அச்சுப் பிரதி நூல்கள் விநியோகிக்கப்படும். மின், ஒலி நூல்களைப் பெற விரும்புவோர் ஜாமியாவின் இணையத் தளத்தில் இடம்பெறும் விண்ணப்பப் படிவத்தில் மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்து நூலை பதிவிறக்கம் செய்யலாம்.