பாலியல் ஒழுங்கின்மையை எதிர்கொள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிலர் பாலியல் குற்றங்களில் சம்பந்தபட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாலியல் ஒழுங்கின்மையை எதிர்கொள்ள எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கைகள் குறித்து என்யுஎஸ் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
பட்டியலிடப்பட்ட நடவடிக்கைகளில் ஊழியர்களுக்கும் மற்றவர் களுக்கும் பயிற்சி அளிப்பதும் அடங்கும்.
அடுத்த சில மாதங்களில் பட்டியலிடப்பட்ட நடவடிக்கைகளில் பெரும்பாலானவை நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தப் பல்கலைக்கழகம் பாலியல் குற்றச்செயல்களைத் தடுக்க ஒரு கொள்கையை உருவாக்கத் திட்டமிடுகிறது. அது மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் உரியதாக இருக்கும்.
தனது ஊழியர்கள், மாணவர்கள் தொடர்பான பாலியல் ஒழுங்கின்மை வழக்குகள் பற்றி ஒவ்வொரு ஆறு மாதமும் என்யுஎஸ் அறிக்கை வெளியிடும்.
ஆனால் அந்த அறிக்கைகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படாது. பாலியல் ஒழுங்கின்மையை அடையாளம் காண்பது, அதை எதிர்த்து சரியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து வழிப்போக்கர்களுக்கும் பயிற்சி அளிப்பது குறித்து என்யுஎஸ் பரிசீலித்து வருகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய அனைவரையும் மதிக்கும் கலாசாரம் கொண்ட வளாகத்தை உருவாக்க பயிலரங்குகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருவேளை பாலியல் ஒழுங்கின்மை குற்றங்கள் நடந்தால் அதை எதிர்கொள்ளும் விதம் குறித்து பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பயிலரங்குகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய் தெரிவித்தார். தற்போதுள்ள பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்புப் பிரிவு மாணவர்களால் நடத்தப்படுகிறது. அந்தப் பிரிவின் பெயர் என்யுஎஸ் பராமரிப்புப் பிரிவாக மாற்றப்படும்.
என்யுஎஸ் ஊழியர்களுக்கும் ஆதரவு வழங்க அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் இப்பிரிவுக்குத் தேவையான வளங்கள் வழங்கப்படும்.
தனது வளாகத்தில் நிகழும் பாலியல் ஒழுங்கின்மைக் குற்றங்கள் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக் குழு விசாரணை நடத்தி முடித்ததும் குற்றம் புரிந்தவர் கைது செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்படும் பட்சத்தில் இரண்டு வாரங்களுக்குள் போலிசாரிடம் புகார் செய்யப்படும் என்பதை உறுதி செய்ய
என்யுஎஸின் உள்கட்டமைப்பு செயல்முறை கடுமையானதாக்கப்படும் என்று பேராசிரியர் டான் தெரிவித்தார். பல்கலைக்கழக ஊழியர்கள் புரியும் பாலியல் ஒழுங்கின்மைக் குற்றங்களை எதிர்கொள்ள குழு ஒன்றை என்யுஎஸ் அமைத்துள்ளது. அக்குழுவின் பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்று என்யுஎஸ் கூறியது.