கடலில் மேற்கொள்ளப்பட்ட விளையாட்டு நடவடிக்கை ஒன்றில் மாணவர்கள் தங்களது ஆடைகளைக் கழற்றிய சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) விசாரணை நடத்தி வருகிறது. என்யுஎஸின் 'கென்ட் ரிட்ஜ் ஹால்' மாணவர் தங்கும் விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்ட இந்தச் சம்பவம் இம்மாதம் 4ஆம் தேதி செந்தோசா தீவின் சிலோசோ கடற்கரையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
கடற்கரையில் ஆக நீண்ட வரிசையில் ஆடைகளை அணிவகுக்கச் செய்வதே அந்த விளையாட்டின் நோக்கம் என அதில் பங்கேற்றிருந்த மாணவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினர். இதைச் செய்ய தண்ணீரில் இறங்கிய அவர்கள், தங்களது ஆடைகளைக் கழற்றினர். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் முறைகேடான நடத்தையை என்யுஎஸ் கடுமையானதாக கருதுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் என்யுஎஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.