சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜனவரி 28 முதல் அமெரிக்க நகர்களுக்கு அன்றாட வழிநில்லாச் சேவையை மீண்டும் தொடங்குகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகர்களுக்கு அந்தச் சேவை கிடைக்கும்.
இது பற்றி ஓர் அறிக்கையில் கருத்து தெரிவித்த எஸ்ஐஏ அமெரிக்க வட்டார துணைத் தலைவர் ஜோய் சியோ, கொவிட்-19 தடுப்பு ஊசித் திட்டம் தொடங்கும் சூழலில் அனைத்துலக விமானச் சேவை மீட்சி அடையும் என்பதற்கான நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் தெரிகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் மூன்றாம் கட்ட தளர்வை நடைமுறைப்படுத்தும்போது பயணத்துறைக் கட்டுப்பாடுகள் மேலும் அகலும் என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்து இருக்கிறார்.
அதே வேளையில், உலகப் பொருளியல் அமைப்பு அடுத்த ஆண்டில் நடக்கும் தன் கூட்டத்தை சுவிட்சர்லாந்தில் இருந்து சிங்கப்பூருக்கு இடமாற்றி இருக்கிறது. இவை எல்லாம் சிங்கப்பூர் வழக்கநிலைக்கு கதவைத் திறப்பதையே காட்டுகிறது என்று ஒரு பேட்டியில் அவர் கூறினார்.
“அமெரிக்கர்கள் இடைவழிப் பயணிகளாக சிங்கப்பூரில் அனுமதிக்கப்படுகிறார்கள். இது விமானப் பயணத்துக்கு வாய்ப்புகளை அதிகமாக்குகிறது. கட்டம் கட்டமாக இவை எல்லாம் நம்பிக்கைமிக்க சூழலை ஏற்படுத்துகின்றன,” என்று மேலும் தெரிவித்த அவர், தற்காலிக பயண ஏற்பாட்டை நடப்புக்குக் கொண்டு வருவதன் தொடர்பில் வியட்னாமுடன் சிங்கப்பூர் பேசிவருவதையும் சுட்டினார்.
எஸ்ஐஏ நிறுவனம், கொவிட்-19க்கு முன்னதாக சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வாரம் 57 சேவைகளை இயக்கி வந்தது.
மார்ச்சில் கொவிட்-19 பரவலை அடுத்து வாரம் மூன்று சேவைகளை மட்டும் எஸ்ஐஏ இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று திரு ஜோய் சியோ விளக்கினார்.
இருந்தாலும் எஸ்ஐஏ இந்த மாதம் நியூயார்க் நகருக்கு வாரம் மூன்று சேவைகளைத் தொடங்கியது. அடுத்த மாதம் முதல் அன்றாடம் சேவை இருக்கும்.
இந்த வாரம் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு வாரம் மூன்று முறை எஸ்ஐஏ பறக்கத் தொடங்கியது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இப்போது வாரம் ஐந்து எஸ்ஐஏ சேவைகள் இடம்பெறுகின்றன. அடுத்த மாதம் அன்றாடம் இந்த நகருக்குச் சேவை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சேவைகள் எல்லாமே வழிநில்லாச் சேவைகள். A350-900 தொலைதூர விமானங்கள் இச்சேவைகளில் ஈடுபடுத்தப்படும் என்று அறிக்கை தெரிவித்தது.