லோரோங் ஹாலுஸ் பகுதியில் வாழும் காட்டுப்பன்றிகளுக்கு உணவளித்ததாக 19 பேர் அபராதத்தை எதிர்நோக்குகின்றனர். இவர்களில் 20 முதல் 51 வயதுக்குட்பட்ட எட்டுப் பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நால்வருக்கும் தலா $2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டு வழக்குகள் பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. மற்ற இருவர் பிப்ரவரி 24ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்ள எண்ணியுள்ளனர்.
முதல்முறையாக இக்குற்றத்தைப் புரிவோருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு வனவிலங்கு சட்டத்தின்கீழ் $10,000க்கு மேற்செல்லாமல் அபராதம் விதிக்கப்படலாம்.
ஏனைய 11 பேர் மீது அடுத்த இரண்டு வாரங்களில் குற்றம் சாட்டப்படும் என்று தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
வனவிலங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நடப்புக்கு வந்த கடுமையான சட்டத்தின் கீழ் இத்தனை பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
நவம்பர் 26 முதல் டிசம்பர் 7 வரையில் தேசிய பூங்காக் கழக அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கையில், காட்டுப்பன்றிகளுக்கு ரொட்டி அல்லது நாய் உணவைக் கொடுத்தபோது இந்த 19 பேரும் பிடிபட்டனர்.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரு மாது வீட்டிற்கு நடந்துசென்று கொண்டிருந்தபோது, சுங்காய் அப்பி அப்பி பூங்காவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டார். இடது கால், முகத்தில் அவருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
உணவளிப்பு, பொறுப்பற்ற முறையில் உணவை வீசுவது போன்ற செயல்கள், மனிதர்களை உணவோடு தொடர்புபடுத்த காட்டுப்பன்றிகளை வழக்கப்படுத்தக்கூடும். அவை மனிதர்களைத் தேடுவதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கிறது. சாலைகள் போன்ற நகர்ப்புறங்களுக்குச் செல்ல அவற்றை வழிநடத்தும்.
தொடர்ந்து உணவளிப்பதால் காட்டு விலங்குகள் ஆக்ரோஷமாக மாறினால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக அவை கொல்லப்பட வேண்டியிருக்கும் என்று பூங்காக் கழகம் கூறியது.
ஜூன் மாதத்திலிருந்து, பல உணவளிக்கும் இடங்களைக் கழகம் அடையாளம் கண்டுள்ளது. வனவிலங்குகளுக்கு உணவளித்ததற்காக 62 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகள், பறவைகள், குரங்குகள் ஆகியவற்றுக்கு உணவளித்ததற்காக 20க்கும் மேற்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.