கொவிட் சூழலிலும் சிங்கப்பூரில் நேற்று தமிழர்கள் பொங்கல் வைத்து உழவர் திருநாளைக் கொண்டாடினர். சிரம காலம் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என வீடுகளிலும் கோயில்களிலும் பொங்கல் பொங்கி கடவுளை வேண்டினர்.
பொதுமக்களுடன் பொங்கல் வைத்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் கட்டுப்பாடுகளுடன் மக்கள் பொங்கல் பொங்கினர்.
மூன்றாம் கட்டத் தளர்வைத் தொடர்ந்து ஆலயத்தில் 150 பேர் வரை கூடஅனுமதி இருந்தாலும் கட்டுப்பாடுகள் ஆலயத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாக ஆலயத்தின் செயலாளர் எ. அண்ணாதுரை தெரிவித்தார்.
எளிமையான அத்தியாவசிய வழிபாடுகள் மட்டுமே நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது கோயிலுக்கு சுதந்திரமாக செல்ல முடிவதில் மகிழ்ச்சி அடைந்த 81 வயது துரைசிங்கம் சிங்கப்பூரை நோய்ப் பரவலில் இருந்து பாதுகாத்து வரும் அனைவருக்கும் இதற்கு நன்றிகூற வேண்டும் என்றார்.
சிங்கப்பூரில் நிரந்தரவாசம் பெற்றுள்ள மலேசியர் திரு விக்னேஷ்வன், மூன்றாம் கட்டத் தளர்வு நடவடிக்கையில் பொங்கல் கொண்டாடுவது ஓரளவு நிம்மதியையைத் தந்திருப்பதாகக் கூறினார்.
ஓராண்டுக்கு மேல் பெற்றோரைப் பார்க்காமல் இருப்பது கவலை அளித்தாலும் சிங்கப்பூரின் சிறந்த நிர்வாகம் ஆறுதலையும் நிம்மதியும் தருகிறது என்றனர் ஜோகூரைச் சேர்ந்த திரு விக்னேஷ்வரன், 40, அவரது மனைவி திரு தீபா 38 இருவரும்.
“கிருமிப் பரவலால் உலகளவில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் சிங்கப்பூரில் மாணவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதாக அண்மைய ‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுகள் காட்டுகின்றன,” என்றனர் அவர்கள்.
பொங்கலை வீட்டில் கொண்டாடுவதுடன் சமூகத்தினருடன் கொண்டாடுவது உற்சாகம் தருவதாக பயிற்றுவிப்பாளர் சுமித்ரி பழனிநாதன், 50, தெரிவித்தார்.
“இத்தகைய விழாக்காலங்களின்போது சமூகத்தைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக்கொள்ளலாம். வசதி குறைந்தோருக்கு எப்படி உதவி செய்யலாம் என்பது பற்றியும் எண்ணிப் பார்க்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தங்களது குடும்பத்தைவிட்டு இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் பணிப்பெண்களுக்கும் இந்தப் பொங்கல் நிம்மதியைத் தரவேண்டும் என்று 37 வயது பணிப்பெண் கலைவாணி கூறினார்.
வியாழக்கிழமைதோறும் கோயிலுக்குச் செல்வதாகக் கூறும் மேற்பார்வையாளர் இளங்கோவன், 45, இவ்வாண்டு தமது பிள்ளைகளின் படிப்பிலேயே தமது முழுக் கவனமும் இருப்பதாகக் கூறினார்.
கிருமிப் பரவலால் பலர் துன்பத்திற்கு உள்ளாகி இருப்பதால் விரைவில் வழக்கநிலை திரும்புவதை விரும்புவதாக இயந்திர உற்பத்தி பணியாளரான 23 வயது கீதா தெரிவித்தார்.
பல்வேறு காரணங்களால் மன உளைச்சல் நிறைந்த உள்ளங்கள் இந்த நல்ல நாளில் நிம்மதியைப் பெறவேண்டும் என்பது சொந்தத் தொழில் செய்யும் 45 வயது அன்பின் பொங்கல் வேண்டுதல்.