2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து உயர்நிலை, தொடக்கநிலைப் பள்ளிகளில் மின்தூக்கிகள் பொருத்தப்படும் என்று கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளது.
தற்போது சிங்கப்பூரில் இருக்கும் 186 தொடக்கப்பள்ளிகள், 152 உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் 70 விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே மின்தூக்கிகள் உள்ளன.
எஞ்சியுள்ள பள்ளிகளில் மின்தூக்கிகளைப் பொருத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
உடற்குறையுள்ள மாணவர்களின் தேவைகளை அனைத்து பள்ளிகளாலும் பூர்த்தி செய்ய முடியுமா என்று அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
மின்தூக்கிகளைப் பொருத்தும் திட்டத்தால் உடற்குறையுள்ள மாணவர்களால் பள்ளிகளில் எளிதாக நடமாட முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்தூக்கிகள் இருப்பதனால் பள்ளிக்கூடக் கட்டடத்தின் அனைத்து மாடிகளுக்கும் உடற்குறையுள்ள மாணவர்களால் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், மின்தூக்கிகள் மட்டும் இருந்தால் போதாது என்றும் உடற்குறையுள்ள மாணவர்களுக்குத் தேவையான சரிவுப் பாதைகள், கைப்பிடிகள் போன்றவையும் பள்ளிகளில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 64 தொடக்கப்பள்ளிகள், 34 உயர்நிலைப்பள்ளிகள், நான்கு தொடக்கக் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் உடற்குறையுள்ள மாணவர்களின் நடமாட்டத்துக்குத் தேவையான வசதிகள் உள்ளன.