கால்நடை பராமரிப்பு நிலையம் ஒன்றில் பகுதி நேர கால்நடை மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் டாக்டர் கி.ஜனனிபிரியா, 29.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொவிட்-19 நோய்ப் பரவல் இவரது பணிகளுக்கு இடையூறு விளைவித்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது தமது பகுதி நேர வேலை பாதிப்படைந்த சூழலில், தொலைத்தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி கால்நடை மருத்துவச் சேவையைத் தொடங்கினார்.
‘ஸும்வெட்’ எனப்படும் தொலைத்தொடர்பு கால்நடை பரிசோதனைத் தளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் டாக்டர் ஜனனி சேர்ந்தார். இந்தத் தளத்தில் தற்போது பணியாற்றிவரும் 28 கால்நடை மருத்துவர்களில் இவரும் ஒருவர்.
இந்தத் தளத்தில் ‘டெலி கன்சல்ட்’ எனும் காணொளிக் காட்சி வழியாக கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளைப் பரிசோதிப்பர்.
நோய் அறிகுறிகள், உணவுமுறை, வாழ்க்கைமுறை, கடந்தகால மருத்துவப் பிரச்சினைகள் போன்றவற்றை அறிந்துகொண்டு கால்நடைகளின் தேவைகளை அறிய முற்படுவர்.
இணையக் காணொளி வழியாக செய்யப்படும் ஒவ்வோர் ஆலோசனையும் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீடிக்கும். நேரடியாக கால்நடை மருந்தகத்தில் எடுக்கப்படும் நேரத்தைவிட இது குறைவு என்கிறார் இத்துறையில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் ஜனனி.
தோல், காது, நடமாட்டப் பிரச்சினை, சிராய்ப்புக் காயங்கள், சோம்பல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவக் குறிப்புகளை மருத்துவர்கள் வழங்குவர். மருந்து தேவைப்பட்டால் அவை நேரடியாக வீட்டிற்கு விநியோகம் செய்யப்படும்.
வீட்டிலிருந்து பணிபுரியும் டாக்டர் ஜனனிக்கு காணொளி வழி ஆலோசனை வழங்குவதில் சில கட்டுப்பாடுகளும் உண்டு. பொதுவாக கால்நடை மருந்தகங்களில் உள்ள பலவிதமான மருத்துவச் சாதனங்கள் இவரது வீட்டில் இருக்காது.
“எனவே எங்களது தொழில்நுட்ப ஆதரவுக் குழுவுடன் சேர்ந்து கால்நடைகளை நாங்கள் கவனத்துடன் ஆராயவேண்டும்,” என்று அவர் கூறினார்.
நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது கால்நடை மருந்தகங்கள் செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தபோதும் அவசரத் தேவைக்கு மட்டும்தான் கால்நடைகள் அங்கு கொண்டு செல்லப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தத் தொலைத்தொடர்புச் சேவையின் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுவது, நீட்டிக்கப்பட்ட சேவை நேரம், நேரடியாக வீடுகளுக்கு மருந்து விநியோகம் செய்யப்படுவது போன்ற அம்சங்கள் கால்நடை உரிமையாளர்களுக்கு சௌகரியம் தருவதாக டாக்டர் ஜனனி கூறுகிறார்.
“பிரச்சினைகள் முற்றுவதற்கு முன்னரே சுகாதாரப் பராமரிப்பு குறித்த சந்தேகங்களைக் களைவதற்கான தளமாக இது உள்ளது,” என்ற இவர், தாம் மருந்தகத்தில் வேலை பார்த்தபோது தமக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்திய சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
“கடுமையாக நோய்வாய்ப்பட்ட பிராணிகள், கடைசி நேரத்தில் மருந்தகத்திற்குக் கொண்டுவரப்பட்டு எங்களால் அவற்றைக் காப்பாற்ற இயலாமல் போனதைக் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன். தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை முறையைச் செல்லப்பிராணி உரிமையாளர்கள் தொடக்கத்திலேயே பயன்படுத்தியிருந்தால் அவற்றைக் காப்பாற்றி இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
‘ஸும்வெட்’ தளம் மட்டுமின்றி ‘பிஏவிசி’, ’வெட்பேல்’ போன்ற தளங்களும் இவ்வாறு இணையம் வழியாக கால்நடைகளுக்கு மருத்துவ ஆலோசனையை இங்கு வழங்குகின்றன.
அமெரிக்காவின் கம்மிங்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வு ஒன்றில், பெரும்பாலான செல்லப்பிராணி உரிமையாளர்கள் இத்தகைய தொலைத்தொடர்பு மருத்துவச் சேவையைப் பயன்படுத்த விரும்புவதாக தெரியவந்துள்ளது. இத்தகைய வசதிகளின் மூலம் தங்களது செல்லப்பிராணிகளின் உடல்நலத்தைப் பேணிக் காக்க முடியும் என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
இருந்தபோதும், செல்லப்பிராணி உரிமையாளர்களில் சிலர், இந்தச் சேவை குறித்த ஐயங்களை வெளிப்படுத்தினர்.
“செல்லப்பிராணியை நேரில் காணாமல் காணொளி மூலம் அதன் தேவைகளை மருத்துவரால் முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா என்பது தெரியவில்லை,” என்று தகவல் தொழில்நுட்ப நிர்வாகியான சரண்யா இளங்கோவன், 29, தெரிவித்தார்.
ஆனால், ‘ஸும்வெட்’ தளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அதைப் பயன்படுத்துவதில் தமக்கு தயக்கம் எதுவுமில்லை என்று ஆசிரியர் திவானா பிள்ளை, 35, கூறினார்.
அவசர மருத்துவ உதவி தேவைப்படாத பிரச்சினைகளுக்கு மட்டுமே இந்தச் சேவையைப் பயன்படுத்த தாம் தயாராக இருப்பதாக முதலீட்டு வங்கி ஒன்றின் நிர்வாகியான குமரேசன் சுப்ரமணியம், 33, கூறினார்.
செல்லப்பிராணி உரிமையாளர்களின் சந்தேகங்களைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறிய டாக்டர் ஜனனி, இந்தத் தொலைத்தொடர்புச் சேவை, பொதுவாக மருந்தகத்தில் வழங்கப்படும் ஆலோசனைக்கு மாற்று வழி அல்ல என்று வலியுறுத்தினார்.
“மருந்தகத்திற்குச் செல்ல வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை செல்லப்பிராணி உரிமையாளர்கள் எடுக்க உதவும் ஆலோசனையை நாங்கள் வழங்குகிறோம். எந்தெந்த சூழ்நிலையில் காத்து இருக்கலாம், எப்போது அவசர மருத்துவ உதவி தேவை என்பதை நாங்கள் ஆராய்ந்து சரியான ஆலோசனையை வழங்குகிறோம்,” என்று இவர் கூறினார்.
அத்துடன், பல காரணங்களால் கால்நடை மருந்தகங்களுக்கு தங்கள் செல்லப்பிராணிகளைக் கொண்டு செல்ல இயலாதபோது தொலைத்தொடர்பு ஆலோசனை முறை உரிமையாளர்களுக்கு கைகொடுப்பதாகவும் டாக்டர் ஜனனி சொன்னார்.
2019ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட ‘ஸும்வெட்’ தளம், முதலில் சிங்கப்பூரில் மட்டும் செயல்பட்டு வந்தது. தற்போதைய கொவிட்-19 சூழலில் மேலும் பல நாடுகளுக்கு அது தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
“ஹாங்காங், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் ஸும்வெட் இயங்குகிறது,” என்று ஸும்வெட் தளத்தின் நிறுவனர் அத்தினா லீ தெரிவித்தார்.
கொவிட்-19 முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது ‘ஸும்வெட்’ தளத்தைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை கூடியதால் வர்த்தகம் 60 விழுக்காடு அதிகரித்திருப்பதாக டாக்டர் லீ கூறினார்.
ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் மேல்நிலைத் தேர்வை முடித்த பின்னர் நியூசிலாந்தின் மெஸ்ஸி பல்கலைக்கழகத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு பட்டம் பெற்ற டாக்டர் ஜனனி, சிங்கப்பூரில் தமது வாழ்க்கைத் தொழிலைத் தொடங்க விரும்பினார்.
“சிங்கப்பூர் மருத்துவர் என்று எனக்குக் கிடைத்த அடையாளம் எனது நம்பகத்தன்மையைக் கூட்டியது. எனவே, சிங்கப்பூரில் எனக்கான நல்ல அடித்தளத்தை உருவாக்கிய பின்னர் வெளிநாடுகளிலும் முத்திரை பதிக்க விரும்புகிறேன்,” என்றார் இவர்.