ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையினரிடம் காணப்பட்ட ஒருமைப்பாட்டு உணர்வையும் கூட்டுப் பொறுப்புணர்ச்சியையும் இந்த கொவிட்-19 கொள்ளைநோயைச் சமாளிப்பதற்கு நாம் ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளலாம் என்றார் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங்.
ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர் 1942ல் வீழ்ந்ததை அனுசரிக்கும் குடிமைத் தற்காப்பு தினமான இன்று, ஜப்பானியர் ஆட்சியின்போது வீழ்ந்தவர்களுக்காக போர் நினைவுச் சேவையின் 54ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
பீச் ரோட்டில் அமைந்திருக்கும் போர்க்கால நினைவகத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர், இதனைத் தெரிவித்தார்.
கொள்ளைநோய்க்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையிலான ஒற்றுமைகளைக் குறித்துப் பேசிய அவர், சிங்கப்பூரின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தருணமாக இந்த கொவிட்-19 நெருக்கடி காலம் அமையலாம் என்றார்.
பெரும் சோதனைக்குள்ளாகிய சிங்கப்பூரர்கள் கடினமான சூழ்நிலையை மீள்திறன், உறுதியுடன் கடந்து வந்தனர் என்று பின்னாளில் கூறப்படும் என அவர் கூறினார்.
போரின் சிரமங்களை எதிர்கொண்ட நாட்டின் முன்னோடித் தலைமுறையினர், நினைத்ததை முடித்தனர்; நன்மதிப்புடன் சேவையாற்றினர்; நாட்டின் கட்டமைப்பில் உதவினர் என்றார் திரு வோங்.
“நம்மால் எந்த வேதனையையும் தாங்கிக்கொள்ள முடியும்; நாம் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள முடியாத துன்பம் ஏதுமில்லை என்பதை அவர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள்,” என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆட்சி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்தது. ஆனால் கொவிட்-19 நெருக்கடி எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலை. இருப்பினும் ஏதோ ஒரு கட்டத்தில், கொள்ளைநோய்ச் சூழல் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றார் அவர்.
முழு விவரம் நாளைய முரசு அச்சுப்பிரதியில்.