தமிழ்நாட்டின் மைய நகரான திருச்சி அருகே உள்ள மன்னார்குடி, புதுக்கோட்டை, உள்ளிக்கோட்டை, ஆலங்குடி போன்ற ஊர்களைச் சேர்ந்த பலரும் வேலை பார்க்கவும் தொழில் தொடங்கவும் 1920களில் இருந்தே சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
சிங்கப்பூரில் குடிமக்களாக இருக்கும் 500,000 தமிழ் வம்சாவளி மக்களில் அவர்களின் விகிதாச்சாரம் அதிகம்.
அந்த ஊர்களை உள்ளடக்கிய வட்டாரம் 'குட்டி சிங்கப்பூர்' என்று கூட குறிப்பிடப்படுகிறது.
என்றாலும் கொவிட்-19 காரணமாக அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பல ஊழியர்கள் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி இருக்கிறார்கள். வேலை இல்லாததும் தங்கள் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை காரணமாகவும் அவர்கள் ஊர் திரும்பி இருக்கிறார்கள்.
இருந்தாலும் கூட மீண்டும் எப்போது சிங்கப்பூர் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே அவர்கள் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறார்கள்.
சிங்கப்பூரில் இரண்டாண்டு காலம் எண்ணெய் துரப்பண நிறுவனத்தில் பணியாற்றிய இந்திரஜித் வீரகுமார், 29, என்பவர் சென்ற ஆண்டு அக்டோபரில் மேலதிருப்பாலக்குடி என்ற தன் கிராமத்திற்குத் திரும்பிவிட்டார்.
சிங்கப்பூருக்கு மீண்டும் வர இப்போது கடுமையாக அவர் முயற்சித்து வருகிறார்.
சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் கட்டுமான இட மேற்பார்வையாளராக வேலை பார்த்த தனபாலன் மணிபாலன், 43, என்ற ஊழியர் விடுமுறை நிமித்தம் தனது ஊருக்குத் திரும்பினார்.
தங்கள் வொர்க் பர்மிட் அல்லது எஸ் பாஸ் காலாவதியாவதற்கு முன்பே சிங்கப்பூர் திரும்பிவிட வேண்டும் என்று ஊர் திரும்பிய ஒவ்வொருவரும் மிகவும் நாட்ட முடன் இருப்பதாக இவர் கூறுகிறார். புதிதாக வேலை பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதே இதற்கான காரணம் என்று திரு தனபாலன் விளக்கினார்.
சிங்கப்பூரில் வேலை பார்க்க புதிதாக வேலை அனுமதிச் சீட்டு (வொர்க் பர்மிட்) பெற வேண்டுமானால் $4,500 முதல் $5,000 வரை செலவாகும். எஸ் பாஸ் பெற $6,000 முதல் $8,000 வரை பணம் செலவழிக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூர் திரும்பியதும் கட்டாய தனிமை உத்தரவை நிறைவேற்ற மேலும் $2,200 தேவைப்படும் என்று அந்த ஊழியர் விளக்கினார்.
"என்னுடைய தாயார், மனைவி, பிள்ளைகளுடன் சில நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா திரும்பினேன். விசா அடுத்த மாதம் முடிகிறது. அதற்குள்ளாக சிங்கப்பூர் சென்றுவிட வேண்டும் என்று விரும்புகிறேன்," என்றார் திரு தனபாலன்.
இருந்தாலும் இந்தியாவில் கொவிட்-19 இரண்டாவது அலை காரணமாக சிங்கப்பூர் பயண கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி இருக்கிறது.
சிங்கப்பூரில் மின்சாரத் துறை ஊழியராக வேலை பார்த்து வந்த நல்லதம்பி தமிழரசன், 42, என்பவர் சென்ற ஆண்டு சிங்கப்பூர் திரும்பிவிடலாம் என்று பல நாட்களாக காத்திருந்தார்.
ஆனால் அது இயலாமல் போகவே தன்னுடைய உள்ளிக்கோட்டை கிராமத்தில் விவசாயிகளுக்காக உணவகம் ஒன்றை இவர் தொடங்கி இருக்கிறார்.
சிங்கப்பூரில் ஆறாண்டு காலம் கட்டுமான இட மேற்பார்வையாளராக வேலை பார்த்த ரங்கராஜன் நடராஜன் என்ற 34 வயது கவிஞர், சிங்கப்பூரில் தான் வாழ்ந்த வாழ்க்கை நினைவலைகளுடன் தன் கிராமத்தில் இருந்து வருகிறார்.
சிங்கப்பூரில் வேலை பார்த்தபோது 2014ல் நடந்த முதலாவது வெளிநாட்டு ஊழியர் கவிதைப் போட்டியில் பங்கெடுத்து இவர் பரிசு பெற்றார்.
திரு ரங்கராஜன் சென்ற ஆண்டு ஜூலையில் தன்னுடைய மனைவியைக் கவனித்துக் கொள்வதற்காக சொந்த ஊருக்குத் திரும்பினார். "வயலில் பெற்றோருக்கு உதவுகிறேன். பக்கத்து ஊரில் ஒரு கடையில் வேலை பார்க்கிறேன். இப்போதைய எனது வாழ்வு ஓஹோ என்று இல்லாவிட்டாலும் இதுதான் என் வாழ்க்கை என்று காலம் தள்ளுகிறேன்," என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரைவிட்டு சென்ற பிறகு இதுவரையில் திரு ரங்கராஜன் புதிதாக எந்தவொரு கவிதையையும் எழுதவில்லை.
சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் 25 ஆண்டு காலம் கணக்காளராக வேலை பார்த்தவர் திரு கருணாநிதி ராஜா, 53.
இவர் சிங்கப்பூருக்குச் சென்றிருக்கும் ஏழாவது தலைமுறை குடியேறி.
"மத்திய கிழக்கு வேறு, சிங்கப்பூர் வேறு. சிங்கப்பூர் பணத்தைப் பொறுத்தவரை நிலையான நாடு. மரியாதைக்கு அங்கு குறைவு இருக்காது. கலாசார ரீதியிலும் தொடர்புள்ள நாடு. தமிழ் பேசுவோர் அதிகம், ஒரே மாதிரியான உணவு," என்று திரு கருணாநிதி கூறினார்.
இவர்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, மன்னார்குடியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரான பி. ஜெயபிரகாஷ், 35, போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர் சிங்கப்பூருக்கு வந்ததில்லை. ஆனால் இவருடைய உறவினர்கள் பலரும் சிங்கப்பூரில் வசிக்கிறார்கள்.
'எங்கள் பகுதி குட்டி சிங்கப்பூர்' என்று கூறும் திரு ஜெயபிரகாஷ், சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ குவான் இயூ தனது 92வது வயதில் 2015ல் மரணமடைந்த நாளில் மன்னார்குடியில் பிறந்த தன்னுடைய மகனுக்கு லீ குவான் இயூ ஜெயபிரகாஷ் என்றே பெயர் சூட்டி இருக்கிறார்.
இப்போது இவரின் குடும்ப பெண்கள் நடத்தும் கூட்டுறவு தொழிலுக்கும் பால்பண்ணை தொழிலுக்கும் திரு லீ குவான் இயூவின் பெயரே சூட்டப்பட்டு இருக்கிறது.