இல்லதரசியாக இருந்து மூன்று பிள்ளைகளையும் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொள்ள மூல காரணமாக விளங்கியவர் 61 வயது திருமதி ரிபெக்கா அல்லி நாயர்.
பிள்ளைகளின் ஆரம்பக் கல்வி பயணத்தில் ஐயங்களை தீர்த்த திருமதி நாயருக்கு சிறு வயதிலிருந்தே தமிழ் மொழி மீது பேரார்வம்.
விக்டோரிய பள்ளியில் ‘ஏ’ நிலை தேர்வுகளை முடித்த பிறகு மேற்படிப்பை தொடர வேண்டும் என்று விரும்பினாலும் அப்போது குடும்ப சூழ்நிலை ஈடுகொடுக்கவில்லை.
1980களில், முந்தைய தேசிய கல்வி கழக நூலகத்தில் பணியாற்ற தொடங்கிய இவர், திருமணம் புரிந்து, முதல் பிள்ளை பிறக்கும் வரை அப்பணியில் ஈடுபட்டார்.
பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில் கவனம் செலுத்தியவாறு பகுதி நேரமாக துணைப்பாட ஆசிரியராகவும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உதவி வந்தார்.மூன்று பிள்ளைகள் பெரியவர்கள் ஆனாதும் தம் நீண்ட நாள் ஆசை மீண்டும் கதவை தட்டியது.
“தொன்மையான தமிழ் மொழியின் ஆழத்தை அறிவதற்கான ஏக்கம் என்னுள் இருந்தது. சங்க இலக்கிய காலத்திலிருந்து நடைமுறை காலம் வரை தமிழ் இலக்கியத்தின் உருமாற்றத்தை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற தேடலால் பட்டப்படிப்பை தொடர முடிவெடுத்தேன்,” என்று கூறினார் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டப்படிப்பை மேற்கொண்ட திருமதி நாயர்.
குடும்பம் இம்முடிவுக்கு ஆதரவளிக்க, 2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக தமிழ் மொழி, இலக்கியம் கூடிய ஆங்கில மொழி படிப்படிப்பை மேற்கொள்ள தொடங்கினார்.
இதற்கிடையில் கல்விச் சூழலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இவற்றையெல்லாம் சமாளிக்க முடியுமா என்ற சிறு ஐயம் திருமதி நாயரின் மனதில் தோன்றியது.
ஆனால் ‘ஒரு காரியத்தில் ஈடுபட நினைத்தால் அதிலிருந்து பின்வாங்காமல் முழுமையாக முடிக்க வேண்டும்’ எனும் இவரது கொள்கை, வந்த அனைத்து கற்றல் சவால்களையும் முறியடிக்க உதவியது. நண்பரிடம் கணினி விசைப்பலகையில் தமிழ் எழுத்துகளை ‘டைப்’ செய்ய கற்றுக்கொண்டு, இளம் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து குழு வகுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, தொழில்நுட்ப உத்திகளை படிப்
படியாகக் கற்றுக்கொன்டார் திருமதி நாயர். கடந்த மே 4ஆம் தேதி நடந்த சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமது பட்டதாரியாகும் நீண்ட நாள் கனவு நனவானது.
“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. மனதையும் உடலையும் திடமாக வைத்துக்கொண்டால் சாதிப்பதற்கு எல்லைகள் இல்லை. வாழ்நாள் கற்றலுக்கு வயது தடையில்லை,” என்று கூறினார் திருமதி நாயர். இந்த கல்வி பாதையில் தொடர்வதற்கு ஊக்கம் தந்த தமது தமிழ் ஆசிரியர்களுக்கும் தம்முடம் முன்பு பணியாற்றிய பேராசிரியர் கோபிநாதனுக்கும் இது ஒரு பெருமைக்குரிய நிகழ்வு.