சிங்கப்பூர்-ஹாங்காங் இடையே இருதரப்பு விமானப் பயண ஏற்பாடு தொடர்பில் ஜூலை மாதத் தொடக்கத்தில் மறுஆய்வு இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 26ஆம் தேதி சிங்கப்பூர்-ஹாங்காங் இருதரப்புப் பயணத் திட்டம் தொடங்கவிருந்த நிலையில், சிங்கப்பூரில் கொவிட்-19 பரவல் மோசமானதை அடுத்து, அது தள்ளிவைக்கப்பட்டது.
அப்போது முதல், சிங்கப்பூரில் சமூகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேபோல, ஹாங்காங்கிலும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.
இந்நிலையில், இருதரப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் விமான சேவையைத் தொடங்கும் நாளைத் தீர்மானம் செய்யுமுன், இரு நாடுகளும் அணுக்கத் தொடர்பில் இருக்கவும் ஜூலை தொடக்கத்தில் நிலைமையை மறுஆய்வு செய்யவும் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் ஹாங்காங் வர்த்தக, பொருளியல் மேம்பாட்டு அமைச்சர் எட்வர்ட் யாவும் இணங்கி இருப்பதாக அமைச்சின் அறிக்கை கூறியது.
முன்னதாக, அண்மையில் ஹாங்காங் அமைச்சருடன் பேச்சு நடத்தியதாகக் கூறிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், இரு நாடுகளுக்கு இடையே விமானப் பயணத்தைத் தொடங்க பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டியது முக்கியம் என்பதை இரு நாடுகளும் ஒத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
"தடுப்பூசி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டியது முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று," என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு கான் சொன்னார்.
எதிர்காலத்திற்கான பாதுகாப்பான பயணத் திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
தென்கொரியாவுடனான இருதரப்புப் பயண ஏற்பாடு பற்றிக் கேட்டதற்கு, "இடைக்கால நோக்கில், இதுபோன்ற திட்டங்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டி உள்ளது. ஆயினும், இப்போதைய கிருமித்தொற்று அலையில் இருந்து மீண்டு வரும், கட்டங்கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் தென்கொரியாஉடன் இருதரப்புப் பயணத் திட்டம் சாத்தியமில்லை," என்று திரு ஓங் பதிலுரைத்தார்.
வேறு நாடுகளுடனும் பயண ஏற்பாடுகள் குறித்து பேச்சு நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.