அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து கொடுக்கப்படும் தனியார் வீடுகளுக்கான இடங்கள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் 25% அதிகமாகி 2,000 ஆக இருக்கும்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,605 வீடுகளுக்கான இடங்கள் கொடுக்கப்பட்டன.
உறுதிப்படுத்தப்பட்ட இடங்களில் தனியார் வீடுகளுக்கான இடங்களை மிதமாக அதிகமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள தாக தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த ஓராண்டில் வலுவான தேவை காரணமாக விற்கப்படாமல் இருக்கும் தனியார் வீடுகள் குறைந்துள்ளன. 2020ல் மந்த நிலையில் இருந்து பொருளியல் மீண்டு வந்த போதிலும் பொருளியலிலும் தொழிலாளர் சந்தையிலும் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது என்று அமைச்சு கூறியது.
2020ல் இரண்டாவது பாதியில் உறுதிப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து தனியார் வீடுகளுக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் 23% குறைந்து 1,370 ஆக இருந்தன. அவை இந்த ஆண்டு முதல் பாதியில் 17% அதிகமாக்கப்பட்டன.
இந்த ஆகப்புதிய உறுதிப்படுத்தப்பட்ட இடங்களில் நான்கு தனியார் குடியிருப்பு இடங்கள் இருக்கின்றன. அவற்றில் எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைக் கட்டுவதற்கான ஓர் இடமும் இருக்கிறது. இந்த நான்கு இடங்களிலும் ஏறத்தாழ 2,000 தனியார் வீடுகள் கட்டப்படும். அவற்றில் 375 எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளாக இருக்கும்.
ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள இடங்களில் மேலும் 4,860 தனியார் வீடுகள் கட்டப்படும். ஆக மொத்தம் 6,860 தனியார் வீடுகள் விற்பனைக்கு வரும். இது இந்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு வந்த 7,045 வீடுகளைவிட 2.6% குறைவானது.
இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆறு தனியார் குடியிருப்பு இடங்கள், இரண்டு பல நோக்கு இடங்கள், ஒரு ஹோட்டல் இடம் ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூரில் ஜூன் 24 முதல் ஜூலை 30 வரை 30 இணைய வட்டமேசை கலந்துரையாடல்கள் நடக்கின்றன.
இந்த நிகழ்ச்சிக்கு 'நம்பிக்கை உணவு விழா' என்று பெயர். 'மக்கான் ஃபார் ஹோப்' அமைப்பு நடத்தும் அந்த விழாவில் புதிய தொழில்முனைவர்களுக்கு தொழில்நுட்பத்துறைத் தலைவர்கள் பல ஆலோசனைகளை வழங்குவார்கள்.
அதேவேளையில் ஃபெய் இயூ சமூகச் சேவைகள் என்ற அமைப்பின் மூலம் நன்மை பெறுவோருக்காக $125,000 திரட்டுவதும் நோக்கம். ஒவ்வொரு கலந்துரையாடலின் போதும் சிங்கப்பூரைச் சேர்ந்த, ஆசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர் பத்து தொழில்முனைவோருடன் சேர்ந்துகொண்டு தலைசிறந்த ஆலோசனைகளை வழங்குவார்.
கலந்துகொள்வோரின் வீடுகளுக்கு சோல் ஃபுட், போப் ஜாய் தாய் போன்ற சமூக நிறுவனங்களிடமிருந்து உணவு அனுப்பப்படும். விழாவை நடத்துவோர் குறைந்தபட்சம் $1,000 செலுத்துவர். கலந்துகொள்வோர் ஒரு நிகழ்ச்சிக்குக் குறைந்தது $100 செலுத்துவர். இவர்கள் www.makanforhope.org என்ற முகவரியில் பதியலாம். https://www.giving.sg/campaigns/makanforhope 2021 என்ற முகவரி மூலம் மக்களும் நன்கொடை வழங்கலாம்.
அதன் மூலம் திரட்டப்படும் தொகை 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவும். குறைந்த வருவாய்க் குடும்பங்களைச் சேர்ந்த சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகள், முதியவர்கள் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.
இதனிடையே, இதுபற்றி கருத்து தெரிவித்த லாபநோக்கற்ற 'மக்கான் ஃபார் ஹோப்' அமைப்பின் தலைவர் திருவாட்டி எல்சி டான், சிறப்பு உதவிதேவைப்படக்கூடிய பிள்ளைகளுக்கும் குறைந்த வருவாய் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் உதவி வருவதால் தாங்கள் ஃபெய் இயூ சமூகச் சேவைகள் அமைப்புக்கு உதவ முடிவு செய்ததாகக் கூறினார்.
மக்கான் ஃபார் ஹோப் அமைப்பு இந்தஆண்டு ஏப்ரலில்செயல்படத் தொடங்கியது. அது முதல் பல அமைப்புகளுக்கு இது உதவி இருக்கிறது.