அண்டைவீட்டார் ஒருவரின் வழிபாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக மாது ஒருவர் பலமாக ஓசை எழுப்பிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளின் கேள்விக்குப் பதிலளித்த காவல் துறை, தன்னிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் சம்பவம் தொடர்பாக 48 வயது மாது ஒருவர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் 19 வினாடி காணொளி ஒன்றை திரு லிவனேஷ் ராமு என்பவர் புதன்கிழமை மாலை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.
தமது வீவக வீட்டிற்கு வெளியே மணியடித்து அவர் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து வெளியே வந்த மாது ஒருவர், தரையிலிருந்த குச்சி ஒன்றை எடுத்து தட்டு போன்ற பொருள் ஒன்றின் மீது 15 வினாடிகளுக்கு வேகமாக அடித்து ஓசை எழுப்பினார்.
தமக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த அந்த மாதின் செயலை திரு லிவனேஷ் கண்டுகொள்ளாமல் இருந்தார்.
திரு லிவனேஷ் குனிந்தவுடன் அவர் வழிபாட்டின்போது ஒலித்த மணியோசை குறைந்தது. அதன் பின்னரும் அந்த மாது தொடர்ந்து சில முறை ஓசை எழுப்பிவிட்டு தமது வீட்டிற்குள் சென்று விட்டார்.
இதுகுறித்து திரு லிவனேஷ் தமது ஃபேஸ்புக் பதிவில் கூறுகையில், "வழிபாடுகளில் ஈடுபடும் பலரைப்போல எங்களது குடும்பத்தில் வாரத்திற்கு இருமுறை, ஐந்து நிமிடங்கள் நீடிக்கும் வழிபாடு இது.
"இந்த வீட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நாங்கள் இதுபோன்ற விவகாரங்களைச் சந்தித்ததில்லை. கொவிட்-19 சூழலில் ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்," என்றார்.
"சிங்கப்பூர் போலிஸ் படை எங்களை அணுகியது. நாங்கள் அவர்களுடன் ஒத்துழைத்து வரு கிறோம். மேற்கொண்டு எதுவும் இருப்பின் விசாரணை முடிந்த பின் னர் தெரிவிக்கிறோம்.
"நாங்கள் வாக்குமூலம் கொடுத்து உள்ளோம். அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
"இவ்வேளையில், எங்கள் அண்டைவீட்டாரின் செயல்கள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
"சகிப்புத்தன்மையின்மைக்கு எதிராக சக சிங்கப்பூரர்கள் ஒருமைப்பாட்டுடன் இருப்பது மன
நிறைவு தருகிறது. இந்த இக் கட்டான நேரத்தில் ஆதரவையும் அக்கறையையும் வழங்கிய அனை வருக்கும் நன்றி," என்றார் திரு லிவனேஷ்.
வியாழக்கிழமை இரவு 7.10 நிலவரப்படி இந்தக் காணொளி தொடர்பாக 4,700க்கும் மேற்பட்டோர் கருத்து கூறியதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் தெரிவித்தது.