கொரோனா கிருமி பரிசோதனைக்காக புக்கிட் மேரா வியூ புளோக் 125Aல் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பரிசோதனைக்கூடம் நேற்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டதும் குடியிருப்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அங்கு நேற்று காலை 10 மணிக்குச் சென்றபோது, அங்கு இரு வரிசைகள் இருந்தன. ஒன்று முன்கூட்டியே பதிவு செய்தோருக்கானது. மற்றது பதிவு செய்யாதவர்களின் வரிசை. மிக நீண்டு இருந்த அவ்வரிசையில் ஏறக்குறைய 120 பேர், பெரும்பாலும் வயதானவர்கள் நின்றனர். நேற்றைக்கான பதிவு எண்ணிக்கை முடிந்துவிட்டதால், மீண்டும் அடுத்த இருநாட்களில் வருமாறு அவர்களுக்குக் கூறப்பட்டது.
காலை 10 மணிக்கு அங்கு வந்த திருவாட்டி சாந்தி நடேசன், 58, குறைந்தது ஒரு மணி நேரம் காத்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். பரிசோதனைக்கு ராஃபிள்ஸ் மெடிக்கலில் பதிவு செய்திருந்ததாகக் கூறிய அவர், அதை ரத்துசெய்து விட்டு புளோக் 125Aல் பரிசோதனை செய்ய முடிவு செய்ததாகச் சொன்னார்.
"நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேராவுடன் பேசினேன், அவர், நான் அவ்வளவு தூரம் செல்ல வேண்டியதில்லை, அருகி லேயே பரிசோதனை செய்துகொள் ளலாம் என்றார். ஆனால் இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்று முன்னாள் பள்ளி நூலகரான திருவாட்டி சாந்தி கூறினார்.
தற்காலிகக் கூடத்துக்கு நேற்று சென்றிருந்த தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஜோன் பெரேரா, பரிசோதனை செய்துகொள்ள இணையத்தில் பதிவு செய்வது எப்படி என்று பல வயதான குடியிருப்பாளர்களுக்குத் தெரிந்திருக்காது, அவர்கள் தற்காலிக பரிசோதனைக்கூடத்துக்கு நேரடியாகச் செல்வார்கள் என தாமும் சுகாதார அமைச்சும் எதிர்பார்த்ததாகக் கூறினார்.
"எனவே, பாதுகாப்பான தூர இடைவெளியை உறுதிசெய்ய பாதுகாப்பு தூர இடைவெளி தூதர்களை அங்கு அமைச்சு பணியில் ஈடுபடுத்தியது. மேலும் தொடக்க நேரத்தில் கூட்டத்தை குறைப்பதற்காக, தங்கள் குடும்பத்தில் உள்ள முதியவர்களுக்கு இணையத்தில் முன்பதிவு செய்ய உதவுமாறு குடியிருப்பாளர்களை நான் கேட்டுக்கொண்டேன்," என்றார் அவர்.
புளோக் 115ல் உள்ள புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் புதிய கொவிட்-19 கிருமித் தொற்றுக் குழுமம் உருவாகியதைத் தொடர்ந்து, புளோக் 116ல் உள்ள கடைக்காரர்கள் 85 பேருக்கு கட்டாய கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதற்காக இந்த பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கான பரிசோதனை நேற்று முன்தினம் நடைபெற்றது.
மே 25 முதல் ஜூன் 12 வரையில் 115 புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்துக்கோ அருகில் உள்ள புளோக் 116ல் உள்ள கடைகளுக்கோ சென்ற குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் இலவசமாகப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வசதியாக நேற்று அக்கூடம் குடியிருப்பாளர்களுக்குத் திறக்கப்பட்டது.
அங்குள்ள 182 கடைகளும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டு நேற்று வரையில் பணிகள் நடைபெற்றன. சந்தையில் மே 25 முதல் பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிருமி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
நேற்று முன்தின நிலவரப்படி புக்கிட் மேரா வியூ சந்தை, உணவு அங்காடி கிருமித்தொற்று குழு மத்துடன் தொடர்புடைய 16 சம்ப வங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.