இடைப்பருவ வாழ்க்கைத்தொழிலர்களுக்கு உதவும் மின்னிலக்கத் திறன்கள் திட்டம்
மின்னிலக்கத் திறன்களில் வேலை தேடிய இடைப்பருவ வாழ்க்கைத்தொழிலர்களுக்கான ஆறு மாத முனைப்புப் பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அந்தப் பயிற்சி பெற்ற 1,300 பேரில் ஏறத்தாழ பத்து விழுக்காட்டினர்க்கு பயிற்சி முடிவடையும் முன்னரே வேலை கிடைத்துவிட்டது.
இவ்வாண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 1,500 பங்கேற்பாளர்கள் பயிற்சியை நிறைவுசெய்வர் என்று, அதனை நடத்தி வரும் போஸ்டன் ஆலோசனைக் குழுமம் (பிசிஜி) தெரிவித்தது.
எஸ்ஜி ஒற்றுமை இயக்கத்தின் இடைப்பருவ வாழ்க்கைத்தொழில் பாதைகள் - நிறுவன இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விரைந்த, ஆழ்ந்த திறன் மேம்பாட்டுத் திட்டம் (Rise) இடம்பெறுகிறது.
பொருளியலிலும் வேலைகளிலும் கொவிட்-19 பரவல் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அரசாங்கம் கடந்த ஆண்டு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பங்கேற்பாளர்களின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்தி, அதில் முன்அனுபவம் இல்லாதபோதும் அவர்களுக்கு அத்துறையில் வேலை பெற்றுத் தர உதவுவதே 'ரைஸ்' திட்டத்தின் நோக்கம்.
இதன்வழி, இன்றியமையாத மின்னிலக்கத் திறன்களையும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப அடிப்படைகளையும் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்வர்.
பயிற்சியாளர்களில் பலரும் நிதி சேவைகள் துறையில் இருந்து வந்துள்ளதாகக் கூறினார் பிசிஜி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அபர்ணா பரத்வாஜ்.
இணையவழி விற்பனை, சந்தைப்படுத்தல், தரவு அறிவியல், செயல்பாடுகள் போன்ற துறைகளில் பல வேலைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 'ரைஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு கலப்புமுறை வேலைச் சந்தைக்கு அக்குழுமம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. ஷாப்பி, ஜேபி மோர்கன், யுஓபி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 200 வேலை வாய்ப்புகளை வழங்கின.
ராஃபிள்ஸ் பிளேசில் அமைந்துள்ள பிசிஜி அலுவலகத்திற்கு மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நேற்று வருகைபுரிந்தார். வேலைச் சந்தையில் பங்கேற்ற நிறுவனங்களுடனும் 'ரைஸ்' திட்டப் பயிற்சியாளர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.