எதிர்காலத்திற்கு உருகொடுக்க மக்களுக்கு மேலும் வாய்ப்பு

எதிர்காலத்திற்கு உருகொடுக்க மக்களுக்கு மேலும் வாய்ப்பு

2 mins read
5d711116-cb6f-4b99-ac35-5f70c6d1786a
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், அமைச்சர் ஜோசஃபின் டியோ, மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது ஆகியோர் எஸ்ஜி ஒன்றிணைந்த செயல் அணி மற்றும் பங்காளித்துவ பயிலரங்கில் கலந்துகொண்டனர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -
Google News Preferred Icon

எஸ்ஜி ஒன்றிணைந்த இயக்கம் வழி யோசனைகளுடன் மக்கள் செயல்படவும் முடியும்

சிங்கப்பூரின் எதிர்காலத்துக்குத் தங்கள் விருப்பம்போல் உருகொடுக்க உதவும் யோசனைகளைத் தெரிவிக்க, செயலில் ஈடுபட சிங்கப்பூரர்களுக்கு மேலும் வாய்ப்புகள் கிட்டவிருக்கின்றன.

தனியார்-அரசாங்கச் செயல் அணிகள் மூலம் அவர்கள் இந்த வாய்ப்பைப் பெறலாம்.

கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு யோசனைகளை முன்வைத்து அவற்றை விவாதித்து மக்கள் தங்களுக்கு விருப்பமான வகையில் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள உதவலாம்.

ஏற்கெனவே இத்தகைய 25 செயல் அணிகள் சென்ற ஆண்டில் அமைந்துள்ளதாகவும் அவை குறைந்த வருமான ஊழியர்களின் நல்வாழ்வு முதல் இளையர்களின் மனநலம் வரை பலதரப்பட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து இருப்பதாகவும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில் பலவும் விவாதிப்பு கட்டத்தைத் தாண்டி செயல்திட்டம் அளவுக்குப் பரிணமித்து இருப்பதாகவும் அவற்றில் மக்கள் கலந்துகொண்டு உதவ முடியும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்தது.

எஸ்ஜி ஒன்றிணைந்த இயக்கம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் வகையில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், மேலும் பரிவுமிக்க, நியாயமான, சரிசமமான சமுதாயமே சிங்கப்பூரர்களின் விருப்பம் என்பதைச் சுட்டினார். இந்த இலக்கை சாதிக்க தீவிர பங்காற்ற மக்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த இயக்கம் நம் நோக்கத்தை பலப்படுத்தி இருப்பதாகவும் உடனடி செயலுக்கான துறைகளை அது அடையாளம் கண்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரும் மாதங்களில் புதிய செயல் அணிகள் உருவாக்கப்படும் என்றும் அவை எஸ்ஜி ஒன்றிணைந்த இயக்கத்தின் கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு அம்சங்களுக்குத் தீர்வு காண முயலும் என்றும் திரு ஹெங் கூறினார்.

மேலும் வலிமை பெற்று எழுவதற்கான எஸ்ஜி ஒன்றிணைந்த கலந்துரையாடல்கள் மூலம் 16,900 சிங்கப்பூரர்களின் கருத்துகள் திரட்டப்பட்டன.

அரசாங்கமும் தனியாரும் சேர்ந்து அமைத்துள்ள செயல் அணி ஒன்றில் கலந்துகொண்டுள்ளவர்களில் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன், 38, என்ற சிங்கப்பூரரும் ஒருவர்.

'டெக்-ஃபார்-குட்' என்ற லாபநோக்கற்ற நிறுவனத்தின் உத்தி, திட்டப் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் இவர், குறைந்த வருவாய் ஊழியருக்கான செயல் அணியில் இடம்பெற்று இருக்கிறார்.

குறைந்த வருவாய் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சமூகத்தில் பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்றும் இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவலாம் என்று தான் நம்புவதாகவும் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

குறைந்த வருவாய் ஊழியர்களுக்கான செயல் அணி நடத்திய பயிலரங்கில் நேற்று துணைப் பிரதமர் கலந்துகொண்டார்.

எஸ்ஜி ஒன்றிணைந்த இயக்கத்துக்குப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜாவுடன் சேர்ந்து தலைமை வகிக்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, செயல் அணிகள் நல்ல முன்னேற்றம் கண்டு இருப்பது தமக்கு ஊக்கமூட்டுவதாகத் தெரிவித்தார்.