ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் சிலரை நோக்கி இனவாதக் கருத்துகளைக் கூறிவிட்டு, ஓர் இளையரைத் தாக்கிய 33 வயது ஆடவர் மீது இன்று (ஜூன் 3) குற்றஞ்சாட்டப்பட்டது.
சம்பவம் கடந்த வியாழக்கிழமை பின்னிரவு நடந்தது. அது குறித்து இன்று அறிக்கை வெளியிட்ட போலிசார், முகம்மது அரிஸ் அன்வார் அலி மீது பொது இடத்தில் தொல்லை தந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை மனநலப் பரிசோதனைக்காக தடுப்புக்காவலில் வைக்கும்படி நீதிமன்ற உத்தரவு கோரப்படும் என்றனர்.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா எஃப் 2 கார் நிறுத்துமிடத்தில் நடந்த சம்பவம் பற்றி போலிசாருக்கு பின்னிரவு 1.50 மணி அளவில் தகவல் கிடைத்தது.
சீன ஆடவர்கள் இருவரிடம் சந்தேக நபர் இனவாதக் கருத்துகளைக் கூறினார் என்றும் அவர்களில் ஒருவரைத் தாக்கினார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலிசார் கூறினர்.
சம்பவ இடத்துக்குப் போலிசார் சென்றபோது, சந்தேக நபர் அங்கு இல்லை. ஆனால் அவர் பின்னர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும், 21 வயது ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் வீடு திரும்பினார் என்று கூறப்பட்டது.
அந்தச் சம்பவம் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார் இல்லத்தரசி திருவாட்டி இலீன் லீ.
பல்கலைக்கழக மாணவரான தமது 21 வயது மகனை அந்த ஆடவர் குத்தியதாகவும் உதைத்தாகவும் அவர் சொன்னார்.
அந்த ஆடவரை யாரும் சீண்டவில்லை என்றும் அவர் தமது மகனையும் இரண்டு நண்பர்களையும் நோக்கி இனவாதக் கருத்துகளைக் கூறினார் என்றும் திருவாட்டி லீ கூறினார்.
ஒருவரின் இன உணர்வுகளைக் காயப்படுத்தும் வார்த்தைகளைக் கூறியது, வேண்டும் என்றே காயம் ஏற்படுத்தியது, வேண்டும் என்றே தொல்லை தந்தது ஆகியவற்றின் தொடர்பிலும் ஆடவர் மீது விசாரணை நடத்தப்படும்,