புக்கிட் பாத்தோக் பேருந்து நிலைய விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வீடு திரும்பிவிட்டதாக டவர் டிரான்சிட் நிறுவனம் இன்று (ஜூலை 12) தெரிவித்துள்ளது.
மற்றவர்களுக்குக் கடுமையான காயம் விளைவித்ததற்காக 65 வயது ஆண் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் இன்று தெரிவித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த பேருந்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், 11 பேர் வீடு திரும்பிவிட்டதாகவும் நால்வர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதாகவும் கூறினார்.
சேவை எண் 945 வழித்தடத்தில் இயங்கும் டவர் டிரான்சிட் நிறுவனத்தின் இரண்டு உள்சேவை பேருந்துகள் நேற்று (ஜூலை 11) மாலை புக்கிட் பாத்தோக் பேருந்து சந்திப்பு நிலையத்தில் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் மூன்று ஓட்டுநர்களும் 15 பயணிகளும் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
பயணிகள் அனைவரும் பக்கவாட்டில் சாய்ந்து கிடந்த பேருந்தில் இருந்தனர். மற்ற பேருந்தில் எந்த பயணியும் இல்லை.
அப்போது ஓட்டுநர் பணியில் இல்லாத எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர் ஒருவரும் காய மடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் தகவல்தொடர்பு பிரிவு மூத்த துணைத் தலைவரான திருவாட்டி டாமி டான், நடை பாதையில் நின்றுகொண்டிருந்த அவர் இந்த விபத்தில் காயம் அடைந்ததாகக் கூறினார்.
“அவர் மருத்துவமனையில் இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம், எல்லா உதவிகளையும் செய்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
பயணிகள் இல்லாத பேருந்து, சந்திப்பு நிலையத்தில் திரும்பியபோது விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மாலை 5 மணி அளவில் அந்த பேருந்து சந்திப்பு நிலையத்திற்குள் நுழைந்த இரண்டாவது பேருந்துடன் மோதியது.
இரண்டாவது பேருந்து அங்கிருந்து உயரம் குறைந்த தடுப்புக் கம்பியில் மோதி, அதன் பக்கவாட்டில் சாய்ந்து அங்கிருந்த சாய்வுப் பாதையில் விழுந்தது. இந்த சாய்வுப் பாதை வழியாகத்தான் பேருந்துகள் நிலையத்திற்குள் நுழையவும் வெளியேறவும் செய்கின்றன.
விபத்தினால் சேவை இடையூறு எதுவும் ஏற்படவில்லை என்றும் பேருந்து நிலையத்தின் பாதிக்கப்படாத பகுதியை பயணிகள் தொடர்ந்து பயன்படுத்த முடிந்தது என்றும் டவர் டிரான்சிட் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னர், நிலைமை வழக்கநிலைக்கு திரும்பியது,” என்று அவர் கூறினார்.
விபத்தில் சிக்கிய பிற பயணிகள் 1800-248-0950 என்ற எண்ணில் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது feedback@towertransit.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது ஜுரோங் ஈஸ்ட், புக்கிட் பாத்தோக் பேருந்து சந்திப்பு நிலையங்களில் உள்ள பயணிகள் சேவை அலுவலகங்களை அணுகலாம்.
எட்டுப் பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் நால்வர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று கூறியது.
மருத்துவமையில் உள்ள இரு வரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் இருவரும் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் டான் டோக் செங் மருத்துவமனை கூறியது.
நோயாளியின் ரகசியத்தன்மையை சுட்டிக்காட்டி மற்ற இரு மருத்துவமனைகளும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.