நடராஜன் மாரிசூசே, 40, என்ற மலேசியர் சென்ற ஆண்டு ஜூலை 31ஆம் தேதி அங் மோ கியோ அவென்யூ 6ல் சேவை எண் 130 பேருந்தில் ஏறினார். அப்போது மணி இரவு சுமார் 7.50 இருக்கும்.
நடராஜன் முகக்கவசம் அணிந்து இருந்தார். இருந்தாலும் முகக்கவசத்தைக் கீழே இறக்கிவிட்டுக்கொண்டு தன் மனைவியுடன் கைபேசியில் பேசியபடியே பேருந்தில் அவர் ஏறினார்.
இதைப் பார்த்த பேருந்து ஓட்டுநரான திரு சுலைமான் ஜுனாடி, முகக்கவசத்தை முறையாக அணியும்படி நடராஜனிடம் கூறினார்.
அதைக் கேட்டு முகக்கவசத்தைச் சரியாக போட்டுக்கொண்ட நடராஜன், பேருந்தின் பின் பக்கம் சென்று ஓர் இருக்கையில் அமர்ந்தார். இருந்தாலும் நடராஜன் முகக்கவசத்தை மறுபடியும் கீழே இறக்கிவிட்டு இருந்ததைப் பேருந்து ஓட்டுநர் பார்த்தார்.
வழியில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், பின் பக்கம் திரும்பி நடராஜனைப் பார்த்து முகக்கவசத்தை முறையாக அணியும்படி மீண்டும் கூறினார்.
சிங்கப்பூர் சட்டப்படி முகக்கவசத்தை முறையாக அணியவேண்டும் என்பதை அவர் நடராஜனிடம் எடுத்துக் கூறினார். அப்போது மணி இரவு 7.58 இருக்கும்.
அதற்கு ஒரு நிமிடம் கழித்து பேருந்து சென்று கொண்டு இருந்தபோது நடராஜன் ஓட்டுநரை நோக்கி நடந்து வந்து ஓட்டுநரைக் கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டினார். ஓட்டுநரை அவரின் இடது தோள்பட்டையில் தாக்கிவிட்டு பேருந்தில் இருந்து நடராஜன் இறங்கிச் சென்றுவிட்டார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தொடர்ந்து பேருந்தை ஓட்டிச் செல்ல தன்னால் இயலாது என்று உணர்ந்த ஓட்டுநர் திரு சுலைமான், எஸ்பிஎஸ் அலுவலகத்திற்கு அது பற்றி தகவல் தெரிவித்தார். பிறகு போலிசிடம் புகார் தாக்கலானது.
அலைக்கழித்தது, தாக்கியது ஆகிய குற்றங்களை நடராஜன் ஒப்புக்கொண்டார். கொவிட்-19 சட்டத்தை மீறியதாகவும் ஒப்புக்கொண்ட நடராஜன், தன் மீது கருணை காட்டும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஒருவரை தாக்கிய குற்றத்திற்கு மூன்றாண்டு வரை சிறை, $5,000 வரை அபராதம் விதிக்க முடியும். கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தை மீறுவோருக்கு ஆறு மாதம் வரை சிறை, $10,000 வரை அபராதம் விதிக்க முடியும்.
நடராஜனுக்கு இரண்டு வாரம் சிறைத்தண்டனை, $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால் அவர் கூடுதலாக எட்டு நாட்கள் சிறையில் இருக்க வேண்டும்.