ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்கள் நெருக்குதலால் திட்டம் தொடங்கவில்லை
சிங்கப்பூர்-ஹாங்காங் இரண்டுக்கும் இடைப்பட்ட சிறப்பு விமானப் பயணத் திட்டத்திற்கு மேலும் தடங்கல் ஏற்பட்டு இருக்கிறது.
அந்தத் திட்டம் ஜூலை 13ஆம் தேதி அதாவது நேற்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் அது கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
அந்தத் திட்டத்தின் புதிய ஏற்பாட்டின் படி, குறிப்பிட்ட விமானங்களில் பயணம் செய்வோர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதை இரண்டு தரப்புகளும் கட்டாயமாக்க இருந்தன.
ஆனால் ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், அத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று நெருக்குதல் கொடுத்தனர்.
சிங்கப்பூர் அறவே தொற்று இல்லா உத்தியில் இருந்து மாறு வதால் அந்தத் திட்டத்தை தொடங்கக் கூடாது என்று அந்த உறுப்பினர்கள் அரசாங்கத்தை நெருக்கினர்.
கொவிட்-19 கிருமி தொடர்ந்து இருந்து வரும் என்ற அடிப்படையில் சிங்கப்பூர் தனது உத்தியை மாற்றி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தன்னுடைய 5.7 மில்லியன் மக்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முற்றிலும் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும் என்பது சிங்கப்பூர் அரசாங்கத்தின் இலக்காக இருக்கிறது.
இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய ஹாங்காங் மருத்துவச் சங்கத்தின் சுவாசநோய் வல்லுநர் லியுங் சி சியூ, ஹாங்காங் எப்போதுமே தனது எல்லைகளை மூடிவைத்திருக்க முடியாது என்றார். இருந்தாலும் எல்லையை எப்போது, எப்படி திறப்பது என்பதில்தான் பிரச்சினை உள்ளது என்றாரவர்.
சிங்கப்பூருடன் விமானப் பயணத்தை தொடங்குவது என்பது ஹாங்காங்கில் அதிக தொற்று ஆபத்து ஏற்பட்டுவிடுமா இல்லையா என்பதைப் பொறுத்து இருக்கும் என்றார் அவர்.
சிங்கப்பூர் அறவே தொற்று இல்லாத கொள்கையைக் கைவிட்டுவிட்டு டெல்டா உருமாறிய கிருமித்தொற்று ஏற்படக்கூடிய ஆபத்துடன் இருக்குமானால் அதற்கான விடை வெளிப்படையான ஒன்றுதான் என்றார் அவர்.
உருமாறிய டெல்டா கிருமி அதிவேகமாக பரவக்கூடியது. ஹாங்காங்கில் தடுப்பூசி வேகம் மந்தமாக இருக்கிறது. ஆகையால் அது எல்லைகளைத் திறந்துவிடக்கூடிய நிலையில் இப்போது இல்லை என்று அவர் விளக்கினார்.
ஹாங்காங்கில் வசிக்கும் 7.5 மில்லியன் மக்களில் ஏறத்தாழ 35 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஓர் ஊசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 24 விழுக்காட்டினர் இரண்டு ஊசிகளையும் போட்டுக்கொண்டு உள்ளனர்.
தடுப்பாற்றல் என்பது தடுப்பூசி மூலம் அல்லது இயற்கை தொற்று மூலம் ஏற்படலாம் என்பதால் தடுப்பூசியைவிட மக்கள்தொகையில் நிலவும் தடுப்பாற்றலே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தான் நம்புவதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் பென் கௌலிங் தெரிவித்தார்.