தொடக்கப்பள்ளி மாணவராக இருக்கும்போது படிப்பு, விளையாட்டுக்கே நேரம் சரியாகிவிடும். பிஞ்சு வயதில் சமூகத்திற்கு உதவ முன்வருவது கடினம். ஆனால் வயதைத் தடையாகக் கருதாமல் $31,000க்கு மேற்பட்ட நன்கொடையைத் திரட்டியுள்ளார் சியோனா சைனி, 10.
சங்காட் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் சியோனா, வசதி குறைந்த முதியோருக்கு உதவும் நோக்கத்தில் நன்கொடையைத் திரட்டியுள்ளார்.
“சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவ வழிகளைக் கண்டுபிடித்து வருகிறேன். சிறிய அளவில் உதவுவதற்குப் பதிலாக பெரிய அளவில் பலருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது,” என்றார் சியோனா.
சியோனாவுடன் இணைந்து அவர் தாயார் 39 வயது திருவாட்டி நம்ரடா சைனியும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தாயும் மகளும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘எஃப்ஆர் கேட்லிஸ்ட்’ (FR-Catalyst) என்ற திட்டத்தின் வழி நன்கொடை திரட்டு முயற்சியை வழி நடத்துகிறார்கள். ‘கிவ்விங்.எஸ்ஜி’ என்ற இணையத்தளத்தில் நன்கொடைத் திரட்டு முயற்சி நடைபெறுகிறது.
இத்தளத்தில் சியோனா சீன மொழியில் பேசும் அருமையான காணொளியும் இடம்பெற்றிருக்கிறது.
“பாலர் பள்ளி முதல் சீன மொழி கற்று வருகிறேன். தனிப்பட்ட அளவில் இணையத்தில் தேடுவது, துணைப்பாட ஆசிரியர்கள், நண்பர்களுடன் பேசும்போது சீன மொழியில் பேசுவேன். எனக்கு அந்த மொழியில் பேச மிகவும் பிடிக்கும்,” என்றார் அவர்.
சீன மொழியில் பேச்சு, ஆங்கில வார்த்தைகளில் எழுத்து கொண்ட காணொளி மூலம் சிங்கப்பூர் மக்கள் பலரைச் சென்றடைய முடியும் என்பதை விளக்கினார் சியோனாவின் தாயார் நம்ரடா.
“கொவிட் நேரத்தில் பலர் சிரமப்படுகின்றனர். குறிப்பாக முதியோர்கள். முதியோருக்கு மரியாதை கொடுப்பது, அவர்களை நன்றாக பராமரிப்பது போன்ற பண்புகளை தாத்தா, பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டார் சியோனா. எங்கு சென்றாலும் முதியோருக்கு உதவ முன்வருவார் சியோனா,” என்றார் நம்ரடா.
நன்கொடைகள் முழுவதும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கப்படும். தற்போது $40,000 தொகை திரட்ட முனைவதாகவும் இந்த நிதி திரட்டு முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார் சியோனா.
www.giving.sg/campaigns/serving_the_elderly என்ற இணையத்தளத்தில் நன்கொடை திரட்டு முயற்சியும் சியோனாவின் காணொளியும் உள்ளன.
“சிறு வயதிலேயே இந்த நன்கொடை திட்டத்தை உருவாக்கினார் சியோனா. ஆர்வத்துடன் என்னிடம் பேசினார். அவர் தாயாரும் ஆதரவளிப்பதைப் பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர் திருமதி கந்தேஸ்வரி குமார், 30.
சிறுவர்கள் இளம் வயதிலேயே இதுபோன்ற நற்செயல்களில் ஈடுபட்டு இந்த அளவிற்கு வளர்வதற்கு முக்கிய காரணமானவர்கள் பெற்றோர். அவர்கள் கொடுக்கும் ஆதரவும் ஊக்கமுமே சிறுவர்களை மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
இதைப் படிக்கும் மாணவர்கள் தாங்கள் செய்த நல்ல செயல்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். இதுபோன்ற செய்திகள் மற்றவர்களுக்கு இந்த வழியில் செல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கும்.