மத்திய விரைவுச்சாலையில் ஆர்ச்சர்ட் சாலை அருகே நேற்று (ஜூலை 23) இரவு நிகழ்ந்த மோசமான வாகன விபத்து ஒன்றில் 31 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
அந்த விபத்தில் காயமுற்ற ஏழு பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர், கார் ஓட்டுநர், லாரி ஓட்டுநர், லாரியில் பயணம் செய்த மூவர் அவர்களில் அடங்குவர்.
ஆனால் அந்த மோட்டார்சைக்கிளோட்டிகளில் ஒருவர் காயங்கள் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அந்த விபத்தில் கார், லாரி, இரண்டு மோட்டார்சைக்கிள்கள் ஆகியவை சம்பந்தப்பட்டன.
சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் வாகன விபத்து குறித்து நேற்று இரவு 9.20 மணியளவில் தனக்க்குத் தகவல் கிடைத்தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக அது குறிப்பிட்டது.
லாரியும் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் பக்கவாட்டில் சாய்ந்து கிடந்தன.
விபத்தில் காயமுற்ற ஒருவரிடம் நாடித் துடிப்பு தென்படவில்லை என்றும் அவர் மூச்சுவிடவில்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அவருக்கு இதய இயக்க மீட்புச் சிகிச்சை (சிபிஆர்) அளிக்கப்பட்டது.