பொருளியலையும் நிதி நிர்வாகத்தையும் நன்கு புரிந்துகொள்வது இளையர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார். அந்தப் புரிந்துணர்வு, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
பொருளியலிலும் நிதித் துறையிலும் நாட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதை வளர்த்துக்கொள்ளும்படி இளையர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
‘தேசிய பொருளியல், நிதி நிர்வாகச் சவால்’ என்ற மெய்நிகர் போட்டி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் துணைப் பிரதமர் பேசினார்.
பொதுக் கொள்கைகளை உருவாக்க, பொருளியல், நிதி நிர்வாகம் இரண்டின் அடிப்படைகளைப் பயன்படுத்த முடியும் என்றும் திரு ஹெங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளியல் சங்கம் ஏற்பாட்டில் அந்தப் போட்டி நடந்தது. மேல்நிலைக் கல்வியைத் தொடர்வதற்கு முன் மாணவர்கள் பொருளியலிலும் நிதி நிர்வாகத்திலும் அதிக நாட்டம் கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் அந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
14வது ஆண்டாக இந்த ஆண்டு அந்தப் போட்டி இம்மாதம் தொடங்கியது. ஏற்கெனவே இரண்டு சுற்றுகள் முடிவடைந்து இருக்கின்றன.
கொவிட்-19 காரணமாக நிச்சயமில்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் இதனால் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று இளைஞர்கள் கவலைப்படுகிறார்கள் என்றும் திரு ஹெங் தெரிவித்தார்.
கொவிட்-19 சூழலால் சில கதவுகள் அடைபட்டு இருக்கின்றன. அதே நேரத்தில் பல புதிய கதவுகள் திறந்து இருக்கின்றன.
கொவிட்-19க்குப் பிந்தைய உலகம் முந்தைய உலகத்தைப் போல் அல்லாமல் வேறுபட்டு இருக்கும். இருந்தாலும் வருங்கால உலகம் மிகவும் ஊக்கமிக்கதாகத் திகழும் என்று அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 காரணமாக மின்னிலக்கப் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் சுற்றுச்சூழல் நிலைப்பாட்டில் புதிதாக நாட்டம் மேம்பட்டு இருக்கிறது என்பதையும் திரு ஹெங் சுட்டிக்காட்டினார். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள நல்ல நிலையில் நம் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டினார்.
பொருளியலை நன்கு புரிந்துகொண்டால் வேலையைப் பெறுவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள உதவி கிடைக்கும்.
அதோடு மட்டுமின்றி அதற்கு அப்பாலும் பல நன்மைகள் ஏற்படும் என்று திரு ஹெங் கூறினார்.