கடந்த மூன்று நாள்களாக ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் குழுமத்துடன் தொடர்பிருந்த வகையில் நூற்றுக்கு மேற்பட்ட கொவிட்-19 தொற்று பாதிப்புகள் பதிவாயின. ஆனாலும். பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் நிலைமை மட்டுப்பட்டு வருகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.
கொவிட்-19 தொற்றுமுன் தனிமைப்படுத்தப்படும் விகிதம் அதிகரித்து இருப்பது ஒரு நேர்மறையான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இம்மாதம் 19ஆம் தேதி, 163 பேர் பாதிக்கப்பட்டிருந்தபோது, தொற்று கண்டறியப்படுமுன் 27 விழுக்காட்டினர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டனர். இப்போது அவ்விகிதம் கிட்டத்தட்ட 40% என்ற அளவில் இருப்பதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
அக்குழுமத்தில் முதன்முதலில் இம்மாதம் 16ஆம் தேதி கிருமித்தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, கிருமிப் பரவலைத் தடுக்கவும் முழுமையாகத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக கடந்த 17ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிவரை அதனை மூட உத்தரவிடப்பட்டது.