சிங்கப்பூரில் வாழும் பெரும்பான்மை யினருக்குச் சிறப்புச் சலுகைகள் இருப்பதை ஒப்புக்கொள்வதும் சிறுமைப்பன்மையினர் அதைப் பற்றி கருத்துகள் வெளிப்படுத்த பாதுகாப்பான தளங்கள் இருப்பதும் இனநல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்று இனவாதம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற இளையர்கள் தெரிவித்தனர்.
‘மாஜுலா கருத்தரங்கு: இன வேறுபாடின்றி’ (ஃபோரம் மாஜுலா: ரிகாட்லர்ஸ் ஆஃப் ரேஸ்) எனும் அந்தக் கலந்துரையாடலை ‘தி பிசினஸ் டைம்ஸ்’ நாளிதழின் ஆதரவுடன் சிங்கப்பூரின் 56ஆம் தேசிய தினத்தை முன்னிட்டு தமிழ் முரசும் மலாய் நாளிதழான பெரித்தா ஹரியானும் இணைந்து ஏற்பாடு செய்தன.
இனவாதமும் நீக்குபோக்கான இனவாதமும்; பெரும்பான்மையினருக்குச் சிறப்புச் சலுகைகள்; இனங் களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வழிமுறைகள் ஆகிய மூன்று கருப்பொருள்களில் கருத் தரங்கு நடந்தது.
எந்தவொரு நாட்டையோ அல்லது சுற்றுச்சூழல் கட்டமைப்பையோ எடுத்துக்கொண்டாலும் அதில், வெளிப்படையாகத் தெரியாத சிறப்புச் சலுகைகள் பெரும்பான்மையினருக்கு இருக்கவே செய்யும் என்றார் குமாரி மிருதுளா குமார், 21.
“பெரும்பான்மையினருக்குச் சிறப்புச் சலுகைகள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்தச் சலுகைகளை உணராமலோ அல்லது அதைத் தவறான முறையில் மற்றவர்களைப் பாதிக்கும் வகையிலோ தனது சுயநலனுக்கு பயன்படுத்தும்போதே அது தவறாகிறது,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற குமாரி மிருதுளா.
பெரும்பான்மையினரின் சிறப்புச் சலுகைகளும் சிறுப்பான்மையினரின் மனப்பான்மைகளும் எந்தவொரு சமுதாயத்திலும் வழக்கமாக கைகோர்க்கும் என்றார் மெண்டாக்கி மன்றத்தின் தலைவரும் கருத்தரங்கின் மலாய் பேச்சாளருமான குமாரி ஃபரிடா முகம்மது சாட், 32.
“ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினராகவோ தங்களைத் தனித்து அடையாளப்படுத்தாமல் சமுதாயம், பொருளாதாரம், வேலையிடம் என எல்லா இடத்திலும் தங்கள் மதிப்பைக் கூட்டவும் பங்களிக்கவும் சிறுப்பான்மையினர் விரும்புவர் என்று நினைக்கிறேன்,” என்றார் குமாரி ஃபரிடா.
விரைவாக தகவல்களைப் பெற வகைசெய்யும் சமூக ஊடகங்களும் தற்போது நிலவி வரும் கிருமித்தொற்று சூழலும் இனம், இனவாதம் குறித்த விழிப்புணர்வையும் உணர்ச்சிகளையும் அதிகரித்துள்ளது என்றார் கருத்தரங்கில் பேசிய திரு சோ வேஹவ், 36.
“எல்லோரும் அதிக மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளனர். இதுபோல் என்றும் நடந்ததில்லை. இது இனவாதப் பிரச்சினைகளில் மட்டுமல்ல, உலகமெங்கும் அதிகரித்து வரும் மணமுறிவுகளிலும் பிரதிபலிக்கிறது, “ என்றார் அடித்தள அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருக்கும் திரு சோ.
சமூக ஊடகங்கள் இனவாதம் குறித்த கருத்துகளைப் பகிர தளங்களை வழங்கினாலும் அது பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் மிருதுளா.
“வெவ்வேறு பிரிவினர்களிடையே நாகரிகமான கலந்துரையாடல்களையும் தொடர்புகளையும் ஊக்கப்படுத்தி அதிகரிக்க வேண்டும். அடிப்படையில் இது சிறுப்பான்மையினருக்கும் பெரும்பான்மையிருக்கும் இடையிலான பிரச்சினை இல்லை. ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவதல்ல. ஆனால் ஒருவருக்கு ஒருவர் எப்படி ஆதரவு அளிக்கிறோம், எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதைப் பற்றியதாக இருக்கவேண்டும். மேலும் பல வெளிப்படையான கலந்துரை யாடல்களுக்கு இது வழிவகுக்கும்,” என்றார் குமாரி மிருதுளா.
கருத்தரங்கில் பங்கேற்காத வேறு இந்திய, சீன, மலாய் சமூகங்களைச் சேர்ந்த அறுவரின் கருத்துகளும் உரையாடலில் பகிரப்பட்டன.
நிதி ஆலோசகர்களாகப் பணி புரியும் 34 வயது திருமதி ஹபிடா ஷா, 31 வயது திரு அனிஷ் மயூரன் ஆகியோர் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்தனர்.
இந்தக் காணொளிகள் கலந்துரையாடல்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்தன.
46 நிமிட கருத்தரங்கை தமிழ் முரசு செய்தியாளர் திரு இர்ஷாத் முஹம்மது, பெரித்தா ஹரியான் செய்தியாளர் திருவாட்டி ஷாஹிதா சர்ஹீத் ஆகியோர் வழி நடத்தினர். ஆகஸ்ட் 5ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு, நேற்று மாலை இணையத்தில் வெளியிடப்பட்டது.
“சிங்கப்பூரில் பிரதானமான இரு சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதிக்கும் இரண்டு நாளிதழ்கள் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது பொருத்தமாக இருந்தது. இந்தப் பிரச்சினைகளை நாம் முறையாகச் சமாளிக்க வேண்டும். ஒன்றுபட்ட சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் உருவாக்கப்பட்டுள்ளது. அதை நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இப்பிரச்சினைகளை ஒதுக்கவும் கூடாது,” என்றார் தமிழ் முரசின் செய்தி ஆசிரியரும் மின்னலக்க ஆசிரியருமான திரு தமிழவேல்.
“தனிப்பட்ட அம்சங்களைவிட பெரிதானது நம் தேசம் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளலாம். ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வை அதிகரிக்கவும் சமுதாயப் பிணைப்பை வலுப்படுத்தவும் இனங்களுக்கிடையிலான உறவு களைப் பற்றிய கலந்துரையாடல்களை, எவ்வளவு கடினமாக இருந்தாலும், தொடர்வது முக்கியம்,” என்றார் பெரித்தா ஹரியான் ஆசிரியருக்கு உதவியாளரான திரு நஸ்ரி ஹாடி சப்பாரின்.