52 தனிநபர், நிறுவனங்களுக்கு $300 முதல் $3,000 வரை அபராதம்
கொவிட்-19 நிர்வாக நடைமுறை விதிகளை மீறியதற்காக கடல்
துறையைச் சேர்ந்த ஏழு நிறுவனங்கள் மீதும் 47 தனிப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த எண்ணிக்கையில் 52 நிறுவனம் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு $300 முதல் $3,000 வரையிலான அபராதமும் விதிக்கப்பட்டதோடு இரு நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையம் நேற்று கூறியது.
இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இவ்வாண்டு ஜூன் வரையில் விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
உல்லாசக் கப்பல்கள், துறை
முகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் மற்றும் கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த கப்பல்கள் போன்றவற்றில் விதிமீறல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சமூக ஒன்றுகூடல்களுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானோர் உல்லாசக் கப்பல்களில் ஏற்றப்பட்டிருந்தது தெரிய வந்ததாக ஆணையம் கூறியது.
மேலும், கடலோரக் கப்பல்துறை பணியாளர்கள் பொருத்தமான தனிநபர் பாதுகாப்புச் சாதனங்களை அணிந்திருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், கப்பலில் பணியாற்றும் நீண்டகால அனுமதி அட்டைதாரர் ஒருவர் ஆணையத்தின் அனுமதியின்றி கடலோரத்திற்கு வந்ததன் மூலம் விதிகளை மீறினார்.
இவை தவிர, வீதிமீறல் கண்டறியப்பட்ட மேலும் பல சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டம் 2020ன் கீழ் பாதுகாப்பு இடைவெளி நடைமுறை விதிகளை மீறுவோருக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
மறுபடியும் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராதம் $20,000 வரையும் சிறைத் தண்டனை 12 மாதம் வரையும் அதிகரிக்கப்படும். விதிமீறல் சம்பவம் நடைபெற்ற கப்பலின் உரிமம் 30 நாட்கள் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். கடல்துறை துறைமுக ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.
கடல்துறையைச் சேர்ந்த நிறு வனங்களும் ஊழியர்களும் கொவிட்-19 தொடர்பான விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் ஆணையம் தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.