அமெரிக்க துணை அதிபர் சிங்கப்பூர் வருவது பற்றி வெளியுறவு அமைச்சர் கருத்து
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வருகிறார். அந்த வருகை அவருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் இடையில் நல்லுறவை பலப்படுத்திக்கொள்ள கிடைக்கும் மிக நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் முதலில் சிங்கப்பூருக்கு வருகை அளிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் டாக்டர் விவியன் கூறினார்.
திருவாட்டி கமலா ஹாரிஸின் வருகை அவருடைய சொந்த ராஜதந்திர வியூகத்தில் ஆசியாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டு வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
திருவாட்டி கமலா ஹாரிஸ் சிங்கப்பூரில் இருக்கையில், கொவிட்-19 தொற்றில் இருந்து மீண்டுவர ஒத்துழைப்பதன் தொடர்பில் முன்னேற்றத்தைச் சாதிக்கலாம் என தாங்கள் நம்புவதாக அமைச்சர் கூறினார்.
அதோடு மின்னிலக்கப் பொருளியல், பசுமை பொருளியல், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றிலும் ஒத்துழைப்பதில் முன்னேற்றம் காணலாம் என்று டாக்டர் விவியன் நம்பிக்கை தெரிவித்தார்.
அணுக்கமாகச் சேர்ந்து செயல்படக்கூடிய ஏராளமான புதிய துறைகள் இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
அமெரிக்க துணை அதிபரின் இந்தப் பயணம் ஆசியாவுக்கான அவரின் மிக நல்ல அறிமுகப் பயணமாக அமையும் என்று டாக்டர் விவியன் கூறினார்.
திருவாட்டி ஹாரிஸ் மூன்று நாள் வருகை மேற்கொண்டு இன்று சிங்கப்பூர் வருகிறார்.
அவருடன் துணை அதிபர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு, அமெரிக்க வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகளும் வருகிறார்கள்.
சிங்கப்பூர் அதிபரை சந்திக்கும் திருவாட்டி ஹாரிஸ் பிறகு பிரதமருடன் பேச்சு நடத்துவார்.
பிரதமர் லீயும் அமெரிக்க துணை அதிபரும் கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பார்கள்.
சிங்கப்பூரில் ஒரு ஆர்க்கிட் மலருக்கு திருமதி கமலா ஹாரிஸின் பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பயணம் அமெரிக்க துணை அதிபர் ஆசியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகும்.
டாக்டர் விவியன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மியன்மார் பற்றியும் கருத்துரைத்தார். மியன்மாரில் ஆசியான் அமைப்பு ஏற்படுத்தி இருக்கும் முன்னேற்றம், நம்பிய அளவிற்கு ஆற்றலுடன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இருந்தாலும் இது ஒரு சிரமமான சூழ்நிலை என்று அமைச்சர் கூறினார்.
மியன்மாரின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் ஐந்து அம்ச கருத்து இணக்கத்தை கடந்த ஏப்ரலில் ஆசியான் அறிவித்தது.
அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக புருணையின் இரண்டாவது வெளியுறவு அமைச்சரை மியன்மாருக்கான சிறப்பு தூதராக ஆசியான் அண்மையில் நியமித்தது.
ஆசியான் தலைவர்களின் உச்சநிலை மாநாடு நவம்பரில் நடக்கிறது. அதற்கு முன்னதாக அந்தத் தூதரின் மியன்மார் பயணம் மூலம் முன்னேற்றம் இருக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சர் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
இருந்தாலும் அவருக்கு மியன்மார் ராணுவம் முழு அனுமதி வழங்க வேண்டியது இதில் முக்கியமானது என்றார் அவர்.
கொவிட்-19 தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், முகக்கவசம் அணிவது நிரந்தரமான அம்சமாக வேண்டும் என்று தான் கருதுவதாகத் தெரிவித்தார்.
டிரேஸ்டுகெதர் பற்றி கருத்துரைத்த டாக்டர் விவியன், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் நிலவும் நம்பிக்கை சிங்கப்பூருக்கு உள்ள ஓர் அனுகூலம் என்றார்.