கொவிட்-19 நோயாளிகளுக்குத் தேவைப்படும் பட்சத்தில் 1,600 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளைக் கொண்டிருப்பதற்கான திட்டங்களை அதிகாரிகள் வகுத்து வருகிறார்கள்.
ஏற்கெனவே இத்தகைய 1,000 படுக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டது. அதிகமான படுக்கைகளை உருவாக்கும் முயற்சிகள் காரணமாக வழக்கமான சேவைகளில் கொஞ்சம் பாதிப்பு இருக்கும்.
ஆகையால் சில குறிப்பிட்ட நடைமுறைகளை ஒத்திவைக்க வேண்டி இருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டம் இன்று நடந்தது. அதில் அமைச்சர் பேசினார்.
மருத்துவமனைகள் வருகையாளர்களுக்கு நான்கு வார காலம் தடை விதித்து இருக்கின்றன.
சமூகப் பராமரிப்பு நிலையங்களில் படுக்கைகளின் எண்ணிக்கையை விரைவில் 4,600 ஆக அமைச்சு கூட்டும்.
இப்போது இந்த எண்ணிக்கை 3,500 ஆக இருக்கிறது.
இவை ஒருபுறம் இருக்க, புதிய வகை சமூக சிகிச்சை நிலையங்களை அரசாங்கம் தொடங்கி இருக்கிறது.
இத்தகைய நிலையங்களில் முற்றிய நோய்களுடன் கூடிய கொவிட்-19 நோயாளிகளை அணுக்கமாகக் கண்காணிக்க சிறப்பு வசதிகள் இருக்கின்றன. அவர்களை நன்கு நிர்வகிக்கவும் அவற்றில் வசதி இருக்கும்.
இத்தகைய முதல் நிலையம் தெம்பனிசில் உள்ள என்டியுசி சுகாதார தாதிமை விடுதியில் இன்று திறக்கப்பட்டது.
இந்த வாரம் ஏறத்தாழ 300 சமூக சிகிச்சை நிலைய படுக்கைகளை ஆயத்தப்படுத்தும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்ப தாக திரு ஓங் தெரிவித்தார்.
வரும் வாரங்களில் மேலும் 700 படுக்கைகள் சாங்கி எக்ஸ்போவில் அமையும். செங்காங் மருத்துவமனையில் 200 படுக்கைகள் தயார் செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இத்தகைய சமூக பராமரிப்பு நிலையங்களை நிர்வகித்து நடத்த சிங்கப்பூர் ஆயுதப் படைகள், தனியார் துறை மருத்துவமனைகள் ஆகியவற்றின் உதவியை அமைச்சு நாடுகிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் சென்ற வாரம் 21 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை அதற்கு முதல் வாரத்தில் 9 பேராக இருந்தது.
சிங்கப்பூர் மருத்துவமனைகள் ஏறத்தாழ 300 தீவிர சிகிச்சை படுக்கைகளை உடனடியாக தயார் செய்துவிட முடியும் என்பதால் இப்போதைய தேவைகளுக்குப் போதிய அளவுக்கு இத்தகைய படுக்கைகள் இருக்கின்றன.
கொவிட்-19 கிருமி தொற்றியவர்களில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் இப்போது வீட்டிலேயே குணமடைந்து வருகிறார்கள்.
ஏறக்குறைய 15 முதல் 20 விழுக்காட்டினர் மருத்துவமனையிலும் மற்றவர்கள் சமூக பராமரிப்பு நிலையங்களிலும் குணமடைந்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.