பொதுமருத்துவமனைகள் தங்கள் வளாகங்களில் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் சிலவற்றில் கூடாரங்களை அமைத்து கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் திரளாகச் செல்லும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டோருக்கு சிகிச்சை வழங்க இந்தத் தற்காலிக சிகிச்சைப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஈஷூன் சமூக மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடங்களில் சிகிச்சை பெற்று வந்தகொவிட்-19 நோயாளிகள் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். சமூகப் பராமரிப்பு அல்லது சிகிச்சை வசதிகளுக்கு இடம் மாற்றப்படுவதற்குக் காத்திருக்கும் வேளையில் சுகாதாரப் பராமரிப்பு தேவைப்படுவோரைப் பராமரிக்க இந்தத் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துள்ளதாக கூ டெக் புவாட் மருத்துவமனை சென்ற மாதம் 24ஆம் தேதியன்று ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் டான் டொக் செங் மருத்துவமனையும் அதிகரித்துள்ள நோயாளிகளைக் கவனிக்கத் தனது அவசர சிகிச்சை பிரிவைப் பெரிதாக்கியது. இங் டெங் ஃபோங் உள்ளிட்ட இதர சில மருத்துவமனைகள் சென்ற ஆண்டு அமைக்கப்பட்ட கூடாரங்களைப் பயன்படுத்துகின்றன. தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோரிடையே கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டபோது அவர்களுக்கு சிகிச்சையளிக்க அக்கூடாரங்கள் அமைக்கப்பட்டன.
அதிக எண்ணிக்கையில் சேரும் நோயாளிகளை முடிந்தவரை வேகமாகக் கவனித்து மற்ற வசதிகளுக்கு அனுப்ப சுகாதார ஊழியர்கள் அதிக நேரம் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை அணிந்தபடி வேலை செய்து வருகின்றனர். தற்போதைய சூழலில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் நோயாளிகள் படுக்கை கிடைக்க காத்திருக்கவேண்டிய நேரம் 20 மணிநேரத்திற்கும் மேல் ஆகலாம். கொவிட்-19 கிருமித்தொற்று தாக்கம் கடுமையாக இல்லாதவர்கள் கட்டங்கட்டமாக சமூகப் பராமரிப்பு வசதிகள் அல்லது கொவிட்-19 சிகிச்சை வசதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மோசமாக நோய்வாய்ப்படக்கூடிய அபாயம் உள்ளோர் மருத்துவமனைகளுக்கு வெளியே தீவிரமாகக் கண்காணிக்க அதிகாரிகள் கூடுதல் படுக்கைகளை அமைத்து வருகின்றனர். கிருமித்தொற்று ஏற்பட்டோரில் கடுமையாக பாதிக்கப்படாத அல்லது நோய்க்கான அறிகுறிகள் இல்லாதோர் வீட்டில் இருந்தபடி குணமடைய வகைசெய்யும் திட்டம் நடப்பில் உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரைவிட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகம் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோய்க்குப் பரவலாக வெளிநோயாளி சிகிச்சை அளிக்கப்படும் வேளையில், உயிர்போகும் அபாயம் அதைவிட மிகக் குறைவாக இருக்கும் கொவிட்-19ஐ அவ்வாறு கையாள்வது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசிய பசிபிக் மருத்துவ நுண்ணுயிரியல், தொற்றுநோய் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பால் தம்பையா கூறியுள்ளார்.