சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசி செயல்திட்டத்தில் சினோவேக் சேர்க்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று அறிவித்தார்.
சுகாதார அறிவியல் ஆணையம் அந்தத் தடுப்பூசிக்குச் சிறப்பு ஏற்பாட்டின் கீழ் தற்காலிக அனுமதி வழங்கி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு சினோவேக் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும் அனைவரும், இரண்டாவது ஊசி போட்டுக்கொண்ட பிறகு நான்கு மாத காலத்திற்கு அல்லது இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை முற்றிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக கருதப்படுவர்.
இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 90 நாள் கழித்து மூன்றாவது சினோவேக் ஊசியை அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே ஒரு முறை அல்லது இரு முறை சினோவேக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருப்பவர்கள் உட்பட, முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கும் மூன்று சினோவேக் தடுப்பூசி வாய்ப்பை அமைச்சு வழங்கும். இருந்தாலும் ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது மொடர்னா தடுப்பூசியை முற்றிலும் போட்டுக்கொண்டு உள்ள, ஒவ்வாமையால் பாதிக்கப்படாதவர்களுக்கு பூஸ்டர் ஊசியாக சினோவேக்கை பயன்படுத்த முடியாது.
இவை ஒருபுறம் இருக்க, சினோவேக் தடுப்பூசி 12 முதல் 17 வயது வரைப்பட்ட சிறார்களுக்கான பொதுவான தடுப்பூசியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை யும் அமைச்சு சுட்டியது.
இருந்தாலும் ஏற்கெனவே தேசிய செயல்திட்டத்தில் உள்ள தடுப்பூசியை முற்றிலும் போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியில் தகுதி இல்லாதவர்களுக்கு மூன்று சினோவேக் தடுப்பூசி வாய்ப்பை அமைச்சு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுகாதார அமைச்சு ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு நிலையத்தில் அமைத்து இருக்கும் தடுப்பூசி நிலையத்திலும் 11 குறிப்பிட்ட பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் தனியார் மருந்தகங்களிலும் சினோவேக் ஊசியை இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என்றும் அமைச்சு தெரிவித்தது.