தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கான விமானப் பயண வழித்தடம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் எல்லையைத் திறந்துவிடுவது பற்றி மலேசியாவும் சிங்கப்பூரும் விவாதிக்கும் என்று மலேசிய சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் நேன்சி சுக்ரி தெரிவித்தார்.
சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சரை இன்று சந்தித்து இது பற்றி தான் விவாதிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
"இது பற்றி வெள்ளிக்கிழமை (இன்று) விவாதிக்கப்படும்," என்று அவர் நேற்று கோலாலம்பூர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மலேசியா வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தன் எல்லைகளை வரும் டிசம்பரில் திறந்துவிடுவது பற்றி ஆராய்ந்து வருகிறது.
அதற்கான ஒரேமாதிரியான நடைமுறைகள் இப்போது தயாராகி வருகின்றன.
மலேசியாவில் லங்காவி தீவுக்கு மட்டும் இப்போது அனைத்துலக பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் நவம்பர் 15ஆம் தேதி முதல் முன்னோடிப் பயணத் திட்டத்தின் மூலம் லங்காவி வரலாம் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஏற்கெனவே அறிவித்து உள்ளார்.
இருந்தாலும் அந்த யோசனையை தேசிய பாதுகாப்பு மன்றம் ஏற்றுக்கொண்ட பிறகுதான் அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் அத்திட்டம் பற்றி பிரதமர் அறிவிப்பு விடுப்பார் என்று மலேசிய சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் நேன்சி சுக்ரி மேலும் தெரிவித்தார்.