பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான், பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்றின் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தான் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
அதனையடுத்து அவர் செயல் பட்ட விதம் பற்றி ஆராய்வதற்காக பாட்டாளிக் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.
திருவாட்டி ரயீசா, நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட விவகாரம் பற்றி அந்தக் குழு ஆராயும் என்று கட்சியின் பேச்சாளர் ஒருவர் நேற்று கூறினார்.
பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தலைவர் சில்வியா லிம், துணைத் தலைவர் ஃபைசல் மனாப் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்று இருக்கிறார்கள்.
குழுவின் பணி முடிந்ததும், அது தான் ஆராய்ந்து அறிந்தவற்றையும் பரிந்துரைகளையும் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் தாக்கல் செய்யும் என்று பேச்சாளர் தெரிவித்தார்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பணியும் நாடாளுமன்ற உரிமைக் குழு எடுக்கும் எந்த முடிவும் தனித்தனியானவை என்றும் அந்தச் பேச்சாளர் தெரிவித்தார்.
திருவாட்டி ரயீசா, அந்தப் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் முன்பு தான் தெரிவித்தவை பொய் என்று திங்கட்கிழமை மன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூர் போலிசிடம் அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். ஏற்கெனவே அந்தச் சம்பவம் பற்றி தான் தெரிவித்தவற்றை அவர் மீட்டுக்கொண்டார்.
திருவாட்டி ரயீசா மூன்று முறை நாடாளுமன்றத்தில் பொய் சொல்லி இருக்கிறார் என்று நாடாளுமன்றத் தலைவரான இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.
திருவாட்டி ரயீசா, 27, தனக்குரிய நாடாளுமன்ற உரிமைகளை மீறி இருக்கிறார் என்று அவருக்கு எதிராக அதிகாரபூர்வமான முறையில் திருவாட்டி இந்திராணி ராஜா புகார் செய்தார்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்பும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு நாடாளுமன்ற நாயகர் டான் சுவான்-ஜின் இணக்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உரிமை மீறல் தொடர்பான புகார்களை அந்தக் குழுவே ஆராயும்.
இதனையடுத்து திங்கட்கிழமை எதிர்த்தரப்பு தலைவர் பிரித்தம் சிங் ஓர் அறிக்கை விடுத்தார்.
திருவாட்டி ரயீசா உண்மை அல்லாத தகவல்களைத் தெரிவித்து இருக்கக்கூடாது என்று அறிக்கையில் எதிர்த்தரப்பு தலைவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற (உரிமைகள், தடைக்காப்புகள், அதிகாரங்கள்) சட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சுதந்திரமாக தன் கருத்துகளைத் தெரிவிக்க வகை செய்கிறது.
அப்படி தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு வெளியே யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தவும் முடியாது என்பதைத் திரு பிரித்தம் சிங் சுட்டிக்காட்டினார்.
இருந்தாலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் நோக்கம் நல்லதாக இருந்தாலும்கூட, அவர் பொய்யான தகவல்களைத் தெரிவிக்க அந்தப் பேச்சு சுதந்திரம் அனுமதிக்காது என்றும் சிங் குறிப்பிட்டார்.