பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு எதிரான புகார் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற உரிமைக் குழுவில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், தொடர்பு, தகவல் அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மக்ஸாம் இருவரும் இடம்பெறுவர்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா ஆகிய இருவருக்கும் பதிலாக அந்த இருவரையும் தான் நியமித்து இருப்பதாக நாடாளுமன்ற நாயகர் டான் சுவான்-ஜின் அறிவித்தார்.
நாடாளுமன்ற அவைத் தலை வராக உள்ள குமாரி இந்திராணி ராஜாதான் பட்டாளிக் கட்சி உறுப்பினருக்கு எதிராக புகார் தெரிவித்தார். போலிசை மேற்பார்வையிடும் பொறுப்பில் உள்ள அமைச்சராக திரு சண்முகம் இருக்கிறார்.
ஆகையால், இந்த இருவரும் நாடாளுமன்ற உரிமைக் குழுவில் இருந்து தாங்களே விலகி விட்டனர். திருவாட்டி ரயீசா கான், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஒன்றைப் பற்றிய விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்தச் சம்பவத்தை போலிசார் தவறாகக் கையாண்டதாக அவர் கூறினார்.
அந்தச் சம்பவம் பற்றி தான் பொய் சொன்னதாக மன்றத்தில் பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து திருவாட்டி ரயீசா கானுக்கு எதிராக நாடாளுமன்ற அவைத் தலைவரான குமாரி இந்திராணி ராஜா புகார் தெரிவித்தார். அந்தப் புகாரை நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பும்படி அவர் கோரிக்கை விடுத்தார். அதை மன்ற நாயகர் ஏற்றுக்கொண்டார்.
திருவாட்டி ரயீசா கானுக்கு எதிரான புகாரை விசாரிக்கும் நாடாளு மன்றக் குழுவில் எட்டு பேர் இடம்பெற்று இருக்கிறார்கள். நாடாளுமன்ற நாயகர் அதற்குத் தலைவராக இருக்கிறார்.
நாடாளுமன்ற (உரிமைகள், தடைக்காப்புகள், அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் நாடாளுமன்ற உரிமைகளை மீறி இருப்பதாகத் தெரியவரும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காலத்திற்குட்பட்ட அளவுக்குச் சிறைத்தண்டனை, $50,000 வரை அபராதம், இடைக்கால நீக்கம், நாடாளுமன்ற நாயகரின் கண்டிப்பு ஆகியவை தவறிழைக்கும் உறுப்பினருக்கான தண்டனைகளில் அடங்கும்.
அதோடு மட்டுமின்றி, உறுப்பினருக்கான உரிமைகளும் தடைக்காப்பும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படலாம். இப்படி நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தவற்றுக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும்.
இதனிடையே, திருவாட்டி ரயீசா கான் செயல்பட்டு இருப்பது பற்றி ஆராய்வதற்காக பாட்டாளிக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.