தீபாவளித் திருநாளை முன்னிட்டு, கிட்டத்தட்ட 800 பக்தர்கள் இன்று முற்பகலில் மார்சிலிங் ரைசில் உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்திற்கு வந்து, இறைவனை வழிபட்டுச் சென்றனர்.
அவர்களுள் இந்தியாவைச் சேர்ந்த உற்பத்தித்துறை ஊழியர் 29 வயது திரு குப்பன் ரெங்குசாமியும் ஒருவர்.
செனோக்கோவில் உள்ள தமது விடுதியில் இருந்து நான்கு மணி நேரம் வெளியே சென்றுவர அவருக்கு அனுமதி கிடைத்தது.
“விடுதியைவிட்டு வெளியே வந்து என் நண்பர்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. இது மனஉளைச்சலைக் குறைக்க உதவுகிறது,” என்றார் கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றிவரும் திரு ரெங்குசாமி.
இங்கு கடந்த 12 ஆண்டுகளாக விநியோக ஓட்டுநராக வேலைசெய்துவரும் இந்திய நாட்டவரான திரு சுப்பையா ரமேஷ், 33, மூன்றாண்டுகளுக்குமுன் மார்சிலிங்கிற்கு இடம்பெயர்ந்ததில் இருந்து இந்தக் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆலயத்தில் தொண்டூழியராகவும் இருந்துவரும் அவர், “நான் இறைவனை நம்புகிறேன். கோவிலுக்கு வந்து மற்றவர்களுக்கு உதவுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது,” என்றார்.
உட்லண்ட்சில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருக்கும் திரு கணபதி, 25, தம் நண்பர்களுடன் சேர்ந்து இன்று காலை கோவிலுக்கு வந்து, இறைவனை வழிபட்டார்.
“நாள் முழுக்க விடுதியிலேயே அடைந்து கிடக்க முடியாது. அதனால், சிறிது நேரமேனும் வெளியில் வந்து பொழுதைக் கழிக்க முடிந்ததில் மகிழ்ச்சி,” என்றார் இந்தியாவைச் சேர்ந்த திரு கணபதி.
ஆலயத்திற்கு இன்று காலை வந்திருந்தார் தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.
“அருகிலுள்ள விடுதிகளில் இருந்து வெளிநாட்டு ஊழியர்கள் பலர் கோவிலுக்கு வர முடிந்தது மிக்க மகிழ்ச்சி தருகிறது. உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கி, ஒன்றாக இணைந்து ஒரே சமூகமாக தீபாவளியைக் கொண்டாடுவதைக் காண்பது அற்புதமானதாக இருக்கிறது,” என்று திரு ஸாக்கி கூறினார்.