தீவில் தீடீர் வெள்ளம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்ற விவரம் தெரிந்தவுடன் உடனே 30 நிமிடங்களுக்குள் அப்பகுதிக்கு விரைந்து சென்றிவிடுவார் பொதுப் பயனீட்டுக் கழக துணைப் பொறியாளர் திரு தேவ் கிரித்திவாசன். கழகத்தின் உடனடி நடவடிக்கைக் குழுவில் இடம்பெறும் திரு தேவ், 2007ஆம் ஆண்டிலிருந்து கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
உடனடி நடவடிக்கை குழு உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட வெள்ளப் பகுதியை அடைந்தவுடன் சாலைப் போக்குவரத்து சீராக இயக்குவதை உறுதி செய்வர். வாகனத்தை பாதிக்கப்பட்ட இடம் அருகே நிறுத்தி, மற்ற வாகனங்கள் பாதுகாப்பாக வழியில் செல்ல வழிவகுப்பர். "அண்மையில் பாசிர் ரிஸ் டிரைவ் 12, தெம்பனிஸ் அவென்யூ 10 சந்திப்பில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சில வாகனங்கள் பகுதி அளவு மூழ்கி, நின்றுவிட்டன. சிக்கிக்கொண்ட ஓட்டுநர்கள் உணர்ச்சிவசப்பட்டபோதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து, அவர்களை மீட்டோம்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு வாகனங்கள் வராமல் இருக்க, திசை திருப்பினோம். நிலைமை சீரானதும், வெள்ளம் ஏற்பட்ட காரணத்தைக் கண்டறியும் பணியில் குழு ஈடுபட்டது," என்று கூறினார் 49 வயது திரு தேவ். தங்களது பணியை இன்னும் துரிதமாகவும் ஆக்கபூர்வமாகவும் மேற்கொள்ள 13 புதிய வாகனங்களையும் மேம்படுத்தப்பட்ட முன்கணிப்பு, கண்காணிப்பு தொழில்நுட்ப சாதனங்களையும் பொதுப் பயனீட்டு கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புது ரக வாகனங்கள் 70 சென்ட்டி மீட்டர் உயர ஆழ தண்ணீர் அளவில் கடந்து செல்லக் கூடியவை. வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியும் கேமராக்களும் நேரலை காட்சிகளையும் தகவல்களையும் கழகத்தின் கூட்டுச் செயல்பாட்டு நிலையத்துடன் பகிர்ந்திடும் வெள்ளத் தடுப்புகளை வாகனத்தில் சுமந்து செல்வதற்கும் வசதி உண்டு.
புதிய வாகனங்கள் மற்றும் மழைப் பொழிவின் தீவிரத்தைக் கணிக்க உதவும் ரேடார் கருவிகள் தரும் தகவல்களையும் தீவு முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் நேரலைக் காட்சிகளையும் 'இன்டிகிரேட்டட் டேஷ்போர்ட்' எனப்படும் ஒருங்கிணைந்த மின்னிலக்கப் பலகையில் இடம்பெறச்செய்துள்ளது கழகம்.
கழகத்தின் கூட்டுச் செயல்பாட்டு நிலையத்தில் இதனை பார்வையிடும் ஊழியர்கள் தீடீர் வெள்ளச் சூழ்நிலை தொடர்பில் கண்காணிக்கவும், உடனடியாக செயல்படவும், முக்கிய முடிவுகளை சீக்கிரமாக எடுக்கவும் வகைசெய்யும்.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் இணையப் பக்கத்தில் உள்ள தகவல்படி, இவ்வாண்டு கனத்த மழை காரணத்தால் 10 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இம்மாதத் தொடக்கத்தில் அதிகமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டன்யர்ன் சாலையின் 450 மீட்டர் பகுதியை உயர்த்தும் முயற்சி எடுக்கப்பட்டது. 'சைம் டார்பி' நிலையத்திற்கும் கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையத்திற்கும் இடையிலான பகுதி உயர்த்தப்பட்டது. இவ்வாண்டு மட்டும் டன்யர்ன் சாலையில் மூன்று தீடீர் வெள்ளச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மற்ற மேம்பாட்டுத் திட்டங்களில், ஜாலான் புசார் பகுதியில் வெள்ளச் சம்பவங்களைத் தடுக்க, சயது ஆல்வி சாலை அருகே 'டிட்டென்ஷன் டாங்க்' எனும் நிலத்தடி தண்ணீர் தேக்கத் தொட்டி அமைக்கப்படுகிறது.
அதோடு, பொதுப் பயனீட்டுக் கழகம் தானியங்கி வெள்ளத் தடுப்பு கருவியை தெம்பனிஸ் கண்டோமினியம் ஒன்றில் வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
அந்த ஒரு மீட்டர் தடுப்பு ஃபோர்ச்சியூன் பார்க் கண்டோமினியத்தின் வாசலில் பொருத்தப்பட்டுள்ளது. நீர் மட்டம் அதிகரித்தால் தடுப்பு செயல்படத் தொடங்கி தானகவே உயரும். இதற்கு அதிக பராமரிப்புத் தேவையும் இருக்காது.
ப. பாலசுப்பிரமணியம்