தானியங்கி இயந்திரங்கள் மூலம் இலவச முகக்கவசங்கள்
தெமாசெக் அறநிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை மேலும் பல முகக்கவசங்களை இலவசமாக விநியோகம் செய்ய இருக்கிறது.
இந்தத் தகவலை லாப நோக்கமற்ற அமைப்பான தெமாசெக் அறநிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.
குடியிருப்பாளர்களை கொவிட்-19 கிருமித் தொற்றிடமிருந்து பாதுகாக்க ஆறாவது முறையாக நாடு தழுவிய முகக்கவச விநியோகத்தில் அது ஈடுபடுகிறது.
அறநிறுவனம் வழங்கும் இலவச முகக்கவசங்களைக் குடியிருப்பாளர்கள் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இது தொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அறநிறுவனம் தெரிவித்தது.
'அல்ட்ராவயலட்-சி பயன்படுத்தி சாதனங்களைச் சுத்தம் செய்யாதீர்'
வீட்டில் உள்ள சாதனங்களை அல்ட்ராவயலட்-சி கிருமி நாசினியைப் பயன்படுத்தி செய்யக்கூடாது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்ட்ராவயலட் கதிர்களிடமிருந்து போதுமான பாதுகாப்பை அவற்றில் பல தருவதில்லை என்று வாரியம் தெரிவித்தது.
எனவே, கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு, உடல்நலப் பிரச்சினை ஆகியவற்றைத் தவிர்க்க பாதுகாப்புச் சின்னங்கள் இல்லாத அல்ட்ராவயலட்-சி கிருமி நாசினியை வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஒரே பாலின உறவு தொடர்பான கொள்கைகள் மாறக்கூடும்
ஒரே பாலின உறவு தொடர்பாக மக்களின் மனப்போக்கு மாறி வருவதால் அதுதொடர்பான கொள்கைகளை ஆங்காங்கு கொஞ்சம் மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வெளிப்படையான பலதரப்பினரை ஏற்கும் சமூகமாகத் திகழ முடியும் என்றார் அவர்.
ஆனால் எந்த ஒரு பிரிவினரும் முழு உரிமை கோரி மூர்க்கத்தனமாக நடந்துகொண்டால் சமூகத்தில் பிளவு ஏற்படும் என்று திரு வோங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினர் மீதான நம்பிக்கை உணர்வு இல்லாமல் போய்விடும் என்றார் திரு வோங்.