பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக கடந்த புதன்கிழமை சிறப்பு சலுகைகள் குழுவின் முன் முன்னிலையானபோது, திருமதி ரயீசா கானுக்கு தெளிவுபடுத்துவதற்கும் அவரது பொய்யைக் காப்பாற்றுவதற்கும் இடையே ஒரு தெரிவை அவர் வழங்கியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.
அக்டோபர் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவரது பொய் விவகாரம் எப்படி வர வேண்டும் என்று திருமதி ரயீசாவிடம் பேசிய திரு சிங், "இது உங்கள் முடிவு" என்று கூறியதன் அர்த்தம் பற்றி தெளிவுபடுத்துவதற்காக குழு அவரை மீண்டும் அழைத்தது.
கடந்த திங்கட்கிழமை நடந்த விசாரணையில், பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம், நவம்பர் 29ஆம் தேதியன்று ரயீசாவின் நடத்தையை ஆராய கூட்டப்பட்ட பாட்டாளிக் கட்சியின் ஒழுங்குக் குழு முன் ரயீசா தோன்றியபோது எடுத்த குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுந்தால், அக்டோபர் 4ஆம் தேதி என்ன செய்வது என்பதை ரயீசா தான் முடிவு செய்ய வேண்டும் என்று திரு சிங் கூறியதாகக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது என்று திருவாட்டி லிம் குழுவிடம் கூறினார்.
புதன்கிழமை தனது சாட்சியத்தில் திரு சிங், நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததற்கான முழு பொறுப்பையும் ரயீசாதான் ஏற்க வேண்டும் என்று அவரிடம் மிகவும் தெளிவாகத் தாம் தெரிவித்ததாகக் கூறினார்.
"உங்கள் முடிவு" என்ற சொற்றொடரைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று ரயீசா ஒப்புக்கொண்டார்.
அக்டோபர் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தான் பொய்யுரைத்தது பற்றி விசாரித்தால், உண்மையைச் சொல்வதா அல்லது தொடர்ந்து பொய் சொல்வதா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அக்டோபர் 3ஆம் தேதியன்று திருமதி ரயீசாவிடம் திரு சிங் கூறினார்.
ஆனால் திரு சிங், "உங்கள் முடிவு" என்று தெரிவித்தபோது, நாடாளுமன்றத்தில் தான் கூறியதற்கு திருமதி ரயீசா பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நவம்பர் 29ஆம் தேதி அன்று நடந்த ஒழுங்குமுறைக் குழுக் கூட்டத்தில் அவர்தான் திருமதி ரயீசாவிடம் கூறியதை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று திரு சிங் கூறினார்.
திரு சிங், திருமதி ரயீசாவிடம் "பொய் சொல்ல முடியாது, சரியா?" என்று கேட்டதையும் திருவாட்டி லிம்மின் குறிப்புகள் காட்டின. அதற்கு அந்த முன்னாள் செங்காங் குழுத்தொகுதி எம்பியும் ஒப்புக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று திருமதி ரயீசாவிடம் அவர் ஏன் தெளிவாகக் கூறவில்லை என்று கேட்டபோது, தான் மிகவும் அதிர்ச்சியான சம்பவத்தை அனுபவித்ததாக ரயீசா குழுவிடம் தெரிவித்ததாக திரு சிங் கூறினார்.
இதன் காரணமாக, ரயீசா தனது குடும்பத்துடன் அச்சம்பவத்தைப் பற்றி முதலில் பேச முடிவு செய்தார்.
அதன் பிறகு அவர் பொய்யுரைத்ததைப் பற்றி தொடர்ந்து பேசலாம் என்று முடிவெடுத்தோம் என்று திரு சிங் விவரித்தார்.
இதற்கிடையே, திரு சிங், அக்டோபர் மாதத்தின் பிற்பாதியில் ரயீசாவின் தந்தையிடம், நாடாளுமன்றத்தில் அவர் மகள் கூறிய பொய்க்கு ரயீசாவே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதாக சிறப்புச் சலுகைகள் குழுவிடம் கூறினார்.
ரயீசா தன் தந்தையிடமும் குடும்பத்தாரிடமும் உண்மையைச் சொல்வார் என்று தான் எதிர்பார்த்ததைச் சுட்டிக்காட்டுவதற்காகவே தான் இதைக் குழுவின் முன் கொண்டு வந்ததாகவும் திரு சிங் கூறினார்.
திரு சிங் மற்றும் ரயீசாவின் தந்தை திரு ஃபரிட் கான் இடையேயான பரிமாற்றம் பாட்டாளிக் கட்சி, சிறப்பு சலுகைகள் குழுவிடம் சமர்ப்பித்த 100 பக்க ஆவணங்களில் இருந்தது.
சிறப்பு சலுகைகள் குழுவால் கோரப்பட்ட ஆவணங்களை இன்னும் வழங்காமல் இருக்கும் பாட்டாளிக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆணை அனுப்பப்பட்டுள்ளது.