பாட்டாளிக் கட்சியின் முன்னாள் எம்.பி. ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் கூறிய புகாரின் முழுமையான விசாரணை குறித்த முடிவுகளையும் பரிந்துரைகளையும் உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழு சமர்ப்பிக்கும் என்று நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்துள்ளார்.
சிறப்புரிமைக் குழு எந்தவொரு முறையாகச் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு புகாரையும் கடுமையாக எடுத்துக்கொள்கிறது என்றும் நாடாளுமன்ற சிறப்புரிமையின் புனிதத்தன்மையையும் நேர்மையையும் நிலைநிறுத்துவதற்காக அத்தகைய புகார்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
"கடந்த ஆண்டு 39 மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மேலும் அது முதல் முறையாக அமர்வுகளின் நேரடி ஒளிபரப்பை அறிமுகப்படுத்தியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று அன்று நாடாளுமன்றத்தில் ஓர் உரையின்போது, ரயீசா பொய் சொன்னதை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரது நடத்தையை ஆராய்வதற்காக சிறப்புரிமைகள் குழு டிசம்பரில் விசாரணைமேற்கொண்டது," என்று திரு டான் நேற்று முன்தினம் தமது வலைப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணுடன் தான் காவல் நிலையத்திற்கு சென்றதாகவும், காவல்துறையின் உணர்ச்சியற்ற கேள்விகளால் அந்த பெண் கண்ணீர் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் நவம்பர் 1ஆம் தேதியன்று, தாம் ஓர் ஆதரவுக் குழுவின் கதையைக் கேட்டு அவ்வாறு கூறியதை ஒப்புக்கொண்டார். நவம்பர் 30ஆம் தேதி ரயீசா எம்.பி.பதவியில் இருந்து விலகினார்.
நாடாளுமன்றச் சலுகைகள் சட்டரீதியான விளைவுகளைப் பற்றிய அச்சமின்றி, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பேச அனுமதிக்கும் அதே வேளையில், "இந்தச் சிறப்புரிமையைப் பயன்படுத்தும்போதும் உரிய விடாமுயற்சியையும் பொறுப்பையும் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு எம்.பி.க்கும் உள்ளது," என்று திரு டான் எம்.பி.க்களுக்கு நினைவூட்டினார்.
"அறிக்கைகள் உண்மைகள் அல்லது நன்கு நிரூபிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
"நாங்கள் பார்த்த இந்த அண்மைய புகார், எம்.பி.க்கள் ஒரு எம்.பி.யாக இருப்பதன் மூலம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகளை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாகும்.
"சிறப்புரிமைக் குழு என்பது நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கும் நிலைக்குழுக்களில் ஒன்றாகும். அத்தகைய குழுக்கள் வரவுசெலவுத் திட்டத்தை ஆழ்ந்து ஆராயும் முக்கியமான பங்கை ஆற்றுகின்றன", என்று திரு டான் மேலும் கூறினார்.
2021ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்துக்கு ஒரு பரபரப்பான ஆண்டாக இருந்ததாகக் கூறிய திரு டான், சிங்கப்பூரின் வெளிநாட்டுத் திறமைக் கொள்கை குறித்த நீண்ட விவாதம் செப்டம்பர் 14ஆம் தேதி காலை 11 மணி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி பின்னிரவு 12.30 மணி வரை மொத்தம் 13.5 மணி நேரம் நீடித்தது என்றார்.
"உண்மையில், இந்தத் தேதிகளில் பிறந்த இரண்டு எம்.பி.க்கள் தங்கள் பிறந்தநாளை நாடாளுமன்ற அவையில் கொண்டாடினர்," என்ற திரு டான், சிங்கப்பூரர்களின் வேலைகள், வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பது குறித்த நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினர் லியோங் மன் வாயின் போட்டித் தீர்மானம் ஆகியவை அதிக நேரம் எடுத்துக்கொண்டன என்றார் திரு டான்.
கொவிட்-19 பெருந்தொற்றின் பிரதிபலிப்பாக மன்றத்தில் எம்.பி.க்கள் சில இருக்கைகளிலிருந்து தள்ளி அமர்ந்தது, கண்ணாடித் திரைகளுக்குப் பின்னால் பேசுவது போன்ற பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன.
எம்.பி.க்கள் 2,601 நாடாளுமன்றக் கேள்விகளை எழுப்பி அவற்றுக் கான பதில்களைப் பெற்றனர் என்றும் திரு டான் கூறினார்.