முதன்முறையாக மார்பகப் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ளும் பெண்கள் இலவசமாக இந்தச் சேவையைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிஷான் - தோபாயோ - சின் மிங் வட்டாரத்துக்கு மாதந்தோறும் செல்லும் சமூக பரிசோதனை பேருந்தில் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.
கூடுதலான பெண்களைப் பரிசோதனையை மேற்கொள்ள வைக்க அறநிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. மார்பகப் புற்றுநோய், உலகளவில் பெண்களின் உயிருக்கு ஆக அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய புற்றுநோயாக உள்ளது.
சிங்கப்பூரில் இதுவே பெண்களிடையே மிகப் பரவலாகக் காணப்படும் புற்றுநோய்.
சிங்கப்பூரில் தினந்தோறும் சராசரியாக ஆறு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது.
தீவு முழுவதும் உள்ள பொது மருந்தகங்களில் 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ள உதவ மார்பகப் புற்றுநோய் அறநிறுவனம் நிதி ஒன்றைத் தொடங்கியுள்ளது. முதன்முறையாக பரிசோதனையை மேற்கொள்ளவிருக்கும் இந்த வயதுப் பிரிவில் உள்ள பெண்களுக்கு இது பொருந்தும். சின் மிங் கோர்ட்டில் அமைந்துள்ள மார்பகப் புற்றுநோய் அறநிறுவனத்தின் புதிய மார்பகப் புற்றுநோய் நிலையத்தில் இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
சிங்கப்பூரின் முதல் மார்பகப் புற்றுநோய் நிலையமான இதை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜாவும் கலந்துகொண்டார்.
"முன்னதாகவே அடையாளம் கண்டு சிகிச்சை அளித்தால், மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாவோர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம், அதன் மூலம் மார்பகப் புற்றுநோயை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் என்ற நிலையை முற்றிலும் மாற்றலாம்," என்று குமாரி ராஜா கூறினார்.