அடுத்த மாதம் ஐந்தாம் தேதியில் இருந்து தகுதிபெறும் பயணிகளுக்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானச் சேவைகளை வழங்கவிருந்தது. ஆனால், மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அதிகாரிகள் ஒத்திவைத்துள்ளதால் திட்டமிட்டபடி விமானச் சேவைகள் தொடங்காது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. பூஸ்டர் எனும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டிருப்போர் எண்ணிக்கை அதிகமாக இல்லாததால் சமூக அளவில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலவுகிறது. அதனால் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதை அது ஒத்திவைத்துள்ளது.
இந்த ஏற்பாட்டிற்குத் தகுதிபெறுவோர் ஆஸ்திரேலியா செல்ல விண்ணப்பிக்கலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள ஆஸ்திரேலிய குடிமக்கள், அந்நாட்டு நிரந்தரவாசிகள், அவர்களின் குடும்பத்தார் ஆகியோரும் முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், தகுந்த விசா வைத்திருப்போர் ஆகியோரும் இந்த ஏற்பாட்டுக்குத் தகுதிபெறும் பயணிகளில் அடங்குவர்.
"மேற்கு ஆஸ்திரேலியாவின் விதிமுறைகளுக்கேற்ப சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செயல்பட்டு வருகிறது, மாற்றங்களுக்கு ஏற்றவாறு நாங்கள் விமானச் சேவைகளை இயக்குவோம். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மன்னிப்புப் கேட்டுக்கொள்கிறோம்," என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 'விடிஎல்' எனும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையின்கீழ் பெர்த்திலிருந்து சிங்கப்பூருக்கு வரும் விமானச் சேவைகள் எவ்வித மாற்றமுமின்றி அடுத்த மாதம் ஐந்தாம் தேதியன்று தொடங்கும் என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையின்கீழ் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டவர் உள்ளிட்டோர் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமின்றி ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரலாம். இத்தகைய பயணிகள் விதிமுறைகளின்படி பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.